PUBLISHED ON : மார் 19, 2026 03:28 AM

கவலைப்பட வேண்டாம்!
ஆர்.சுப்புராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த சட்ட சபை தேர்தலின் போது, 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி, ஆட்சியில் அமர்ந்த தி.மு.க., அவற்றில், 50 வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றாமல் இருந்து விட்டு, ஆட்சி நிறைவுறும் நேரத்தில், 'சொன்னதை மட்டுமல்ல; சொல்லாததையும் செய்தோம்' என்று விளம்பரம் செய்கிறது.
பொய்யில் உழன்று கொண்டிருக்கும் கழகத்தின் அவல ஆட்சியில் நொந்து, வெறுத்துப் போயிருக்கும் வாக்காளர்கள், மீண்டும் தி.மு.க.,விற்கு ஓட்டளிப்பரா என்பதே சந்தேகம்; இதில், ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலைப்பட்ட கதையாக, அ.தி.மு.க.,வின் எதிர்காலம் குறித்து கவ லைப் படுகிறார், துணை முதல்வர் உதயநிதி.
'தற்போது, அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் ஒன்றாகி விட்டன; விரைவில், பா.ஜ.,விடம் அ.தி.மு.க.,வை அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி, 'சரண்டர்' ஆக்குவார்' என்று ஆருடம் கூறுகிறார்.
அ.தி.மு.க.,வை பழனிசாமி பா.ஜ.,விடம் அடகு வைத்தால் என்ன, மொத்தமாக விற்று விட்டால் தான் உதயநிதிக்கு என்ன நஷ்டம்?
ஒரேயடியாக, அ.தி.மு.க., என்ற அரசியல் கட்சி, தமிழகத்தில் இருந்து ஒழிந்து விட்டால், தி.மு.க.,வுக்கு, 'ஜாக்பாட்' அடித்தது போல லாபம் தானே?
'அன்னப்போஸ்ட்' ஆக, ஓட்டு பதிவு இல்லாமலேயே வெற்றி பெறலாம் அல்லவா?
அப்படி இருக்கும் போது எதற்காக அ.தி.மு.க.,வின் எதிர்காலம் குறித்து கவலைப்பட வேண்டும்?
அ.தி.மு.க., ஆட்சியில், கிலோ 50 ரூபாய்க்கு விற்ற அரிசி இன்று, 80 ரூபாய்க்கு விற்கிறது. வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி உயர்வால் வீட்டு வாடகை பல மடங்காக உயர்ந்துள்ளது.
கஞ்சா, போதைப் பொருட்களால் சிந்திக்கும் திறனற்ற மிருகங்களாக மாறி வருகிறது, இளைஞர் சமூகம். இந்த போதை ஆசாமிகளால் குழந்தைகள் கூட வீட்டை விட்டு வெளியில் வரமுடியவில்லை. இந்த லட்சணத்தில் தான், தி.மு.க.,வின் ஆட்சி உள்ளது.
மக்களின் அதிருப்தியை மடைமாற்றம் செய்ய, கிழவிக்கு குமரி வேஷம் கட்டி மணப்பந்தலில் உட்கார வைப்பது போல், நிர்வாக சீர்கேட்டை மறைக்கும் விதமாக, இலவச திட்டங்களை அள்ளி வீசி, குறுக்கு வழியில் வெற்றியடைய நினைக்கும் தி.மு.க., துணை முதல்வர் உதயநிதி, அ.தி.மு.க., குறித்து கவலைப்படலாமா?
எலிக்கு காய்ச்சல் அடிக்கிறது என்று பூனை எங்காவது காவடி எடுக்குமா?
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல! எஸ்.சுந்தாஸா, கும்பகோணத் தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு வெளியிட்ட எட்டாம் வகுப்பு பாட புத்தகத்தில், நீதிமன்றம் குறித்து அவதுாறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளாக கூறி, அப்புத்தகத்திற்கு தடை விதித் துள்ளது, நீதிமன்றம்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கூடிய மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், 'இந்த தவறுக்காக சம்பந்தப்பட்டவர்களின் தலைகள் உருள வேண்டும்' என்று, பிரெஞ்சு சர்வாதிகார மன்னன் லுாயிஸ் அளவிற்கு, கடும் வார்த்தைகளை பிரயோகம் செய்துள்ளனர்.
ஆனால், அதே புத்தகத்தில், அரசு மற்றும் சமுதாயத்தில் ஊழல் பல மட்டத்தில் பரவி இருப்பதும், அதன் காரணங்களும் விவரிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தையும் இந்த ஊழல் விஷயத்தில் இழுத்தவுடன், மற்ற அனைத்து பணிகளையும் விட்டுவிட்டு தானாக முன்வந்து இவ்வழக்கை எடுத்துள்ளனர், நீதிபதிகள்.
பல கோடி ருபாய் பணம் பதுக்கிய வழக்கில் நீதிபதி வர்மா மீதும், ரயில்வே டிரிபியூனல் வழக்கில் நில அபகரிப்பு செய்த நீதிபதி ஆர்.கே மிட்டல், நீதிமன்றத்தின் பணத்தில், 32 லட்சம் ரூபாயை சொந்த உபயோகத்திற்கு எடுத்த நீதிபதி சவுமித்ரா சென் போன்றோரின் ஊழல், இந்திய நீதிமன்றங்களில் பொன்னெழுத்தில் பதிக்க வேண்டிய சான்றுகள்.
சொல்ல போனால், நீதிபதிகளுக்கு எதிராக, 8,000க்கும் அதிகமான குற்ற அறிக்கை உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி களின் பார்வையில் உள்ளன என்று, நீதிமன்ற அறிக்கையே தெரிவிக்கிறது.
கடந்த 2021ன் நீதித்துறை அறிக்கையின்படி, இந்திய நீதிமன்றங்களில், 4.5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில், 58.50 லட்சம் வழக்குகள் உயர் நீதிமன்றங்களிலும், 69,000 வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன.
ஒரே வழக்கில், ஒரே மாதிரியான ஆவணங்களை வைத்து, இரு வேறு வகையான தீர்ப்பு, கீழமை மற்றும் உயர் நீதிமன்றங்களில் ஏன் அளிக்கப்படுகிறது என்ற சாமா னியர் கேள்விகளுக்கு நீதிபதிகள் பதிலளிப்பரா?
மேலும், வழக்கில் தீர்ப்பு அளித்த பின், மேல்முறையீடு செய்ய அவகாசம் கொடுத்து, அரசியல் மற்றும் பண பலம் படைத்த குற்றவாளி களை கைது செய்ய தடை விதிப்பது ஏன்?
சாதார ண குடிமகன்களுக்கும், பணம் மற்றும் அதிகாரம் படைத்தவருக் கும் வெவ்வேறு அளவீடுகள் வைத்து நீதிமன்றம் செயல்படுவது, குடிமகன்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல்.
அளவுக்கு அதிகமாக சலுகைகள் பெற்று, வழக்குகளின் தேக்க நிலைக்கும் தாங்களே காரணம் என்பதை ஏற்றுக்கொள்வதுடன், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற மன நிலையிலிருந்து நீதிபதிகள் மாற வேண்டும்!
என்ன வகை அரசியல் இது? எம்.வடிவேலு, சென்னை யில் இருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் இரு திராவிட கழக அரசியல்வாதிகளும் போட்டி போட்டுக் கொண்டு இலவச திட்டங்களை அறிவிக்கின்றனர். ஏற்கனவே, அரசு மாநகர பேருந்துகளில், மகளிருக்கு இலவசமாக பயண திட்டத்தை தி.மு.க., அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், வரும் சட்டசபை தேர்லை முன் னிட்டு, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆண்களுக்கும் இலவச பயண திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்' என்று அறிவித்துள்ளார், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி.
அதேநேரம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான இலவச பயண திட்டத்தில், முதியோருக்கு மாதத்திற்கு, 10 டோக்கன்கள் மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது.
இவற்றை வைத்து, மாதத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதுகுறித்து இதற்கு முன் ஆண்ட பழனி சாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசும் கண்டு கொள்ளவில்லை; தற்போது ஆளும் தி.மு.க., அரசும் கண்டுகொள்ளவில்லை.
இலவசம் என்பது இயலாதவர்களுக்கு வழங் கினால் தான், கொடுப்ப தற்கு கூட மதிப்பு இருக்கும். திடகாத்திரமாக, மாதம், 50,000 - 60,000 சம்பளம் வாங்கும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்; அதேநேரம், மூத்த குடிமக் களுக்கு மாதத்திற்கு, 10 டோக்கன் என்று வழங்கு வது என்ன வகை அரசியல்?
