தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ அத்துமீறும் ஆசிரியரின் சொத்தை பறியுங்கள்!

அத்துமீறும் ஆசிரியரின் சொத்தை பறியுங்கள்!

அத்துமீறும் ஆசிரியரின் சொத்தை பறியுங்கள்!


PUBLISHED ON : பிப் 11, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 11, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பி.ரேவதி பாலு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்து அரசு பள்ளியில், மூன்று ஆசிரியர்கள் சேர்ந்து, 13 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர் என்பதை படித்தபோது, ஈரக்குலை நடுங்கிப்போனது.

சம்பந்தப்பட்ட சிறுமி ஒரு மாதமாக பள்ளிக்கு வராததால், அம்மாணவியின் வீட்டுக்கு சென்ற தலைமை ஆசிரியை விஷயத்தை அறிந்து அதிர்ந்து போய், குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் புகார் அளிக்கவே, இவ்விஷயம் வெளி உலகிற்கு வந்துள்ளது.

கூட்டு பலாத்காரத்தால் சிறுமி கர்ப்பமானது வெளியில் தெரிந்தால் அவமானம் என்று அஞ்சி, கருக்கலைப்பு செய்துள்ளனர்.

ஆசிரியர் என்ற பெயரில் ஒளிந்திருக்கும் இத்தகைய ஓநாய்களுக்கு, அரசு இதுவரை என்ன தண்டனை அளித்துள்ளது, இனியும் அளிக்க உள்ளது?

யாரை நம்பி பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது?

மூன்று ஆசிரியர்கள் சேர்ந்து, உலகம் அறியா சிறுமியை நாசம் செய்திருக்கின்றனர் என்றால், இதற்காகத்தான் ஆசிரியர் பணிக்கு வந்தனரா, இதற்காகத்தான் அவர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படுகிறதா?

இந்த மூன்று ஆசிரியர்களும், இன்னும் எத்தனை மாணவியரின் வாழ்க்கையை சீரழித்துள்ளனரோ!

மானத்துக்கு அஞ்சி, பிள்ளைகளின் எதிர்காலம் கருதி எத்தனை பெற்றோர் வாய்மூடி மவுனக் கண்ணீர் வடிக்கின்றனரோ!

ஆசிரியருக்கு முதல் தகுதியே, நல்லொழுக்கம் தான்; அது இல்லையென்றால், அவர் அந்த பணிக்கே தகுதி இல்லாதவர்!

பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் ஆசிரியர்களை, 'போக்சோ'வில் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்துவதால் மட்டும் என்ன நிகழ்ந்து விடுகிறது... ஜாமினில் வெளியே வருகின்றனர்; தண்டனை காலம் முடிந்ததும், மீண்டும் பணியில் அமர்ந்து, தங்கள் சேட்டைகளை ஆரம்பிக்கின்றனர்.

'எரிவதை பிடுங்கினால், கொதிப்பது அடங்கும்' என்பதுபோல், இத்தகைய ஆசிரியர்களை உடனடியாக நிரந்தரமாக பணி நீக்கம் செய்வதுடன், அதுவரை அவர்கள் பணியில் சம்பாதித்த அத்தனை சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

அப்போதுதான், பெண் பிள்ளைகளை நெருங்க அஞ்சுவர்!



முருக பக்தரின் கோபத்திற்கு ஆளாகாதீர்!


எஸ்.வைத்தியநாதன், திருப்பாலை, மதுரை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 1982 - 85 காலகட்டத்தில், திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா என்ற பெயரில், 8க்கு 8 அடியில் திறந்தவெளி கட்டடமும், அதன்முன் பச்சை நிற கொடியும் மட்டும் தான் இருக்கும். அதை கடந்து தான் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல முடியும்.

இப்போது, அந்த தர்கா மிகப்பெரிதாக கட்டப்பட்டுள்ளது; வக்பு வாரியமும் உரிமை கொண்டாடுகிறது. அதை விட்டுக்கொடுப்பது போன்று, காசி விஸ்வநாதர் மலைக்கோவிலுக்கு செல்ல புதிய பாதையையும் கோவில் நிர்வாகம் உருவாக்கியுள்ளது.

இந்த உலகில் இஸ்லாம் மதம் பிறப்பதற்கு முன்பே உருவானது, திருப்பரங்குன்றம் முருகன் கோவில்; மலை முழுதும் முருகனுக்கே சொந்தம்.

அப்படி இருக்கும்போது, ஸ்ரீகந்தரின் மலை எப்படி சிக்கந்தர் மலையாக இருக்க முடியும்?

அங்கிருக்கும் தர்கா தங்களுக்கு சொந்தம் என வக்பு வாரிய பிரமுகர்கள் அடிக்கடி வந்து பார்த்து, தங்கள் உரிமையை நிலை நாட்டுகின்றனர். ஆனால், திருப்பரங்குன்றத்தை பாதுகாக்க வேண்டிய அறநிலையத் துறையோ வாயே திறக்கவில்லை.

அமைச்சர் சேகர்பாபுவோ இந்த பக்கம் தலைவைத்து கூட படுக்கவில்லை.

சில நாட்களுக்கு முன், திருப்பரங்குன்றம் பிரச்னை குறித்து கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களிடம், வாழை பழத்தையும், விளக்கெண்ணெயையும் கலந்தது போல், ஒரு பதில் கொடுத்துள்ளார் அமைச்சர்.

இந்த விவகாரத்தில் முஸ்லிம் எம்.எல்.ஏ., - எம்.பி., என அனைவரும் களமிறங்கியுள்ள நிலையில், அறநிலையத் துறையும், அதன் அமைச்சரும் ஏன் மவுனமாக இருக்கின்றனர்? கோவிலை நிர்வகிக்கும் இவர்கள் தானே முருகனின் சொத்தை பாதுகாக்க வேண்டும்?

மதுரையில் நுாற்றுக்கணக்கான தர்காக்கள் உள் ளன. அவற்றில் எத்தனை தர்காக்களில் ஆடு, கோழி பலி கொடுக்கின்றனர்? திருப்பரங்குன்றம் மலையில் மட்டும் ஏன் இவ்வளவு பிடிவாதம்?

முஸ்லிம்களின் ஓட்டுக்காக, ஒட்டுமொத்த முருக பக்தர்களின் கோபத்துக்கு ஆளாவது தி.மு.க.,வுக்கு நல்லதல்ல; இந்த பிரச்னையில் ஹிந்துக்கள் குறிப்பாக, முருக பக்தர்கள் கடும் கோபத்துடன் இருக்கின்றனர். முருக பக்தர்களில், 10 சதவீதம் பேர் தி.மு.க.,விற்கு எதிராக மாறினால் போதும், 20 'சீட்' கூட கிடைக்காது.

அதிலும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., மதுரையில் இரண்டாம் இடம் பெற்றதை தி.மு.க., நினைவில் கொள்ள வேண்டும்!



முத்தரசனின் எண்ணம் என்ன?


ஆர்.நந்தன், விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட கழகத்தினர் கருப்பு சட்டையை, சீருடை போல் அணிவர்; ஆனால், வேட்டி மட்டும் வெள்ளையாக இருக்கும். அதுபோல கழகத்தினர் கருப்பு- - சிவப்பு பார்டர் போட்ட வேட்டியையும், அ.தி.மு.க.,வினர் கருப்பு - -வெள்ளை- - சிவப்பு பார்டர் போட்ட வேட்டியையும், கம்யூனிஸ்ட்கள் செந்நிற சட்டையையும் அணிந்து, பவனி வருவது வழக்கம்.

இவர்கள் வேட்டி அணிந்தால் என்ன, அணியாவிட்டால் என்ன, நம்மை வம்புக்கு இழுக்காமல் இருந்தால் சரி என்ற, 'ரீதியில்' பொதுமக்கள் எவரும் அவர்கள் உடை அலங்காரம் குறித்து விமர்சனமோ, கேலியோ செய்வதில்லை.

அதேபோன்று, மாட்டுக்கறி உணவு விவகாரத்தில், 'என் உணவு; என் உரிமை' என்று முழங்கிய போது, 'அவர்கள் உடம்பு; அவர்கள் உரிமை' என்று எவரும் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன், அந்த கட்டுப்பாட்டை மீறி, திருவள்ளுவர் அணியும் உடை குறித்து விமர்சித்து, ஆட்சேபம் எழுப்பி, வெகுண்டெழுந்துள்ளார்.

ஈரோட்டில் அளித்த பேட்டி ஒன்றில், 'கவர்னர் தினமும் வள்ளுவர் சிலைக்கு காவி ஆடை அணிவிக்கிறார்; பின், மரியாதை செலுத்துகிறார்; அது எதற்கு என புரியவில்லை. பிரச்னையை ஏற்படுத்தி கலகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார்' என்று கூறியுள்ளார்.

கவர்னர், வள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்தால் என்ன, வெள்ளை ஆடை அணிவித்தால் என்ன இல்லை ஆரஞ்சு நிற உடை அணிவித்தால் தான் என்ன?

ராஜ்பவனில் இருக்கும் வள்ளுவருக்கு தானே, காவி உடை அணிவித்து அழகு பார்த்தார்... முத்தரசன் வீட்டுக்குள் நுழைந்து, பிரச்னை செய்யவில்லையே?

பிரச்னையை உருவாக்க வேண்டும் என்பது கவர்னரின் நோக்கம்போல் தெரியவில்லை; முத்தரசனின் எண்ணமாக அல்லவா தெரிகிறது?



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us