அது ஒரு குழந்தைகள் நல மருத்துவமனை. அங்கு நோயின் வீரியத்தை விட, பிஞ்சு உடல்கள் தாங்கும் வலியின் வேதனை அதிகம். ஆனால், அதைவிடக் கொடுமை என்னவென்றால், தங்கள் கண்மணிகள் படும் துயரத்தைக் கண்டு, ஒன்றும் செய்ய முடியாமல் கண்ணீர் சிந்தி, உள்ளுக்குள் உருகும் பெற்றோர்களின் தவிப்புதான்.
அங்கு மருத்துவர்கள் கடவுளாய் நின்று கருணையோடு கவனித்துக் கொள்கிறார்கள்; நவீன மருந்துகளும், அதிநவீன மருத்துவ உபகரணங்களும் குழந்தைகளின் உடலைக் குணப்படுத்தத் தங்களின் முழு ஆற்றலையும் செலுத்துகின்றன. இருப்பினும், அந்த வெள்ளைச் சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் குழந்தைகளுக்கு ஏதோ ஒன்று குறைவது போலவே இருக்கிறது. அவர்களுக்குத் தேவைப்பட்டது வெறும் மாத்திரைகள் மட்டுமல்ல; அன்பான ஒரு தொடுதல், அரவணைப்பு, தங்களின் வலியை மறக்கச் செய்து துள்ளி விளையாட வைக்கும் ஒரு உன்னதத் தோழமை!
குழந்தைகளின் இந்த ஏக்கம் நிறைந்த மௌனத்தை உடைக்க, அங்கு இரண்டு தேவதூதர்கள் நுழைந்தனர். அவர்கள் வேறு யாருமல்ல; 'ஹேட்லி' மற்றும் 'குரோவர்' என்ற இரண்டு செல்ல நாய் தோழர்கள்!
அவை சாதாரண நாய்கள் அல்ல; மருத்துவமனைச் சூழலில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைக் கையாள்வதற்காகவே, அவற்றுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.இந்த இரு தோழர்களும் வார்டுகளுக்குள் நுழையும் போதே, அங்கிருக்கும் சோகக் காற்று மறைந்து விடுகிறது.படுக்கையிலேயே முடங்கிக் கிடக்கும் குழந்தைகளுடன் மென்மையாக விளையாடுவது, அவர்களின் கைகளைப் பருகுவது என தங்களின் எல்லையற்ற அன்பைப் பொழிகின்றன.
இந்தத் தோழர்களின் வருகைக்குப் பின், ஊசி போடும் போது அலறும் குழந்தைகள் கூட, இவற்றின் மென்மையான ரோமங்களைத் தடவிக்கொண்டே அமைதியாகி விடுகிறார்கள். குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்களின் உடலில் ஆச்சரியத்தக்க நேர்மறை மாற்றங்களை இவை ஏற்படுத்தி வருகின்றன.
'வார்த்தைகளால் சொல்ல முடியாத ஆறுதலை, ஒரு நாய் தோழனின் அமைதியான பார்வையும், அதன் வாலசைப்பும் தந்துவிடுகிறது.'சுயநலமற்ற இந்த உன்னதச் சேவையை, அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற சின்சினாட்டி குழந்தைகள் மருத்துவமனையில் நாம் நேரில் காண முடியும்.