PUBLISHED ON : ஜூலை 16, 2011 12:00 AM

கருணாநிதி பாணியில்...!
எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த், அவரது கட்சி, 'டிவி' மூலம் பேட்டியளித்தார்.
அருகில் பேட்டி எடுப்பவர், 'லேப் - டாப்' ஒன்றை வைத்துக் கொண்டு, பொதுமக்கள், இ-மெயில் மூலம் கேள்வி கேட்பது போலவும், அதை படித்ததும், அதற்கு விஜயகாந்த் பதில் அளிப்பது போலவும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.'மதுரையில், 'தயா சைபர் பார்க்' இருக்கிறதே...?' என, ஒரு கேள்வி கேட்டபோது, 'அதற்கான விரிவான பதில், என் பாக்கெட்டில் இருக்கிறது' எனக் கூறிய விஜயகாந்த், பாக்கெட்டிற்குள் கை விட்டு விட்டார். பின், 'இ-மெயில்' கேள்விக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சி என்பதை புரிந்து கொண்டு, சுதாரித்தபடி பாக்கெட்டிலிருந்து கையை எடுத்து பதிலளித்தார். 'அந்த சைபர் பார்க் கட்ட பணம், '2ஜி'யிலிருந்து வந்ததா என்பதை விசாரிக்க வேண்டும்' என்றார்.இதைப் பார்த்த சென்னையைச் சேர்ந்த கட்சித் தொண்டர் ஒருவர், 'தி.மு.க., தலைவர் கருணாநிதி, கேள்விகளை தானே எழுதி, அதற்கு பதிலும் எழுதி, பேட்டியைப் போல் வெளியிடுவது உண்டு... அந்த மாதிரி நம்ம தலைவரும், 'ஹைடெக்கா' புது, 'டிரெண்டை' உருவாக்கிட்டாரே...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.
'இவருமா...?'
மதுரை கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. கூட்டம் துவங்கும் முன்பே, இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன், கலெக்டர் அலுவலகம் வந்தார். கலெக்டர் சகாயத்தை நேரில் சந்தித்து, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். குறைதீர் நாள் கூட்டத்திற்கு கலெக்டர் புறப்படவும், பாண்டியனும் வெளியே வந்தார். அவரை நிருபர்கள், போட்டோ கிராபர்கள் சூழ்ந்து கொண்டு படமெடுத்தனர். 'கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த காரணம் என்ன...?' எனக் கேட்டனர்.'முதியோர் உதவித் தொகை கேட்டு மனு கொடுக்க வந்தேன்... மரியாதை நிமித்தமாக கலெக்டரை சந்தித்தேன்...' என, சிரித்தவாறு கிண்டலாக கூறிவிட்டுச் சென்றார்.உடனே, அங்கிருந்த நிருபர் ஒருவர், 'ஐயோ பாவம்... ஆதரவற்றோர் பட்டியல்ல இவருமா இருக்கார்...?' என்றதும், சிரித்துக் கொண்டே நிருபர்கள் பட்டாளம் கலைந்தது.

