PUBLISHED ON : செப் 21, 2011 12:00 AM

வாயே திறக்காமல்...!
விழுப்புரம் நகராட்சியில், 36 வார்டுகளில், 10 பெண் கவுன்சிலர்கள் உள்ளனர்.
இதில், அ.தி.மு.க., கவுன்சிலர் மல்லிகா மட்டுமே கூட்டம் தோறும் வார்டு குறைகளை பேசுவார். மற்ற பெண் கவுன்சிலர்கள் வாய் திறந்ததே இல்லை. பெயரளவில் ஒன்றிரண்டு கூட்டங்களில் மட்டும் வார்டு பிரச்னைகளை சிலர் பேசியுள்ளனர். ஐந்தாண்டில் கடைசியாக நடந்த கூட்டத்தில், ஒருவருக்கொருவர் புகழ்ந்து பேசினர். 'இப்போதாவது பேசுங்களேன்' என, பெண் கவுன்சிலர்களிடம் இதர கவுன்சிலர்கள் வற்புறுத்த, இரண்டு கவுன்சிலர்கள் மட்டுமே எழுந்து, 'நன்றி...' எனக் கூறிவிட்டு அமர்ந்தனர். மற்றவர்கள் கூச்சப்பட்டு, அது கூட பேசவில்லை. இதைப் பார்த்த நிருபர் ஒருவர், 'பெண்களுக்கு உரிமை கொடுத்து கவுன்சிலர் ஆக்கினாலும், கடைசி வரை டம்மியாவே இருந்துட்டு போறாங்களே...' என, ஆதங்கப்பட்டார்.
'சின்னையான்னு கூப்பிடு...!'
சுற்றுச்சூழல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சின்னையா, அமைச்சராகும் முன் சென்னை, பெருங்களத்தூரில் இருந்த ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனியில் பணிபுரிந்தவர். கட்சி பணிகளில் ஆர்வம் காட்டியதால், தற்போது அமைச்சராகி உள்ளார். அவருடன் பணிபுரிந்த தொழிலாளர்கள் ஏராளம். அமைச்சர் பதவி ஏற்ற பின், அவர் கலந்து கொள்ளும் பொது விழாக்களில், தன்னுடன் பணிபுரிந்த நண்பர்கள் யாரையாவது பார்த்து விட்டால், உடனே பெயர் சொல்லி அழைத்து, மனம் விட்டு பேசுகிறார். அமைச்சர் என்பதால் அவரது நண்பர்கள், 'அண்ணே...' என்று அழைத்தால், 'யோவ்... அப்படி கூப்பிடாதே... எப்போதும் போல் சின்னையான்னே கூப்பிடு...' என்று செல்லமாக கடிந்து கொள்கிறார். இதைக் கண்ட அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், 'பதவி வரும் போது பணிவு வரணும்ங்கறதை அண்ணன் நல்லா கடைப்பிடிக்கறாரே...' என, மெச்சினார்.

