PUBLISHED ON : ஏப் 29, 2026 12:00 AM

தி.மு.க., கூட்டணி சார்பில், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா, விருத்தாசலத்தில் சமீபத்தில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘பொதுமக்கள் என்னிடம் பேசுவதை பார்க்கும்போது, தி.மு.க., கூட்டணி அமோகமாக வெற்றி பெறும் என்றே தெரிகிறது. விருத்தாசலம் தொகுதியில் நான் வெற்றி பெற்றதும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். தே.மு.தி.க., – தி.மு.க., உட்பட அனைத்து கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளும் சிறப்பாக பணிபுரிந்தனர்.
‘அதிகபட்ச ஓட்டுப்பதிவு இருந்தால், ஆளுங்கட்சிக்கு ஆதரவு அலை இருக்கும். இது, ஒட்டுமொத்த மக்களும் ஏற்றுக்கொண்ட கூட்டணி. வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கையில், 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார்’ என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘தி.மு.க., வெற்றி மீது, அந்த கட்சியினரை விட இவங்க ரொம்பவே நம்பிக்கையா இருக்காங்களே...’ என, முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.
