PUBLISHED ON : செப் 03, 2026 01:53 AM

சென்னை அம்பத்துார் அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி யி ன் முன்னாள் தலைவரான, தி.மு.க.,வைச் சேர்ந்த துரை வீரமணி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி, வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சமீபத்தில் நடந்தது. இதில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலர் உதயநிதி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இருவரும் மணமக்களை வாழ்த்தி பேசுவர் என எதிர்பார்க்கப்பட்டு, 'மைக்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், முதலில் வந்த உதயநிதி, மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு உடனடியாக புறப்பட்டார். அடுத்த 15 நிமிடங்களில் ஸ்டாலின் வந்தார்; அவரும், மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பினார். எப்போதும் ஒன்றாக வரும் இருவரும் தனித்தனியே வந்து சென்றது, தி.மு.க., நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
'கட்சியின் கட்டமைப்பை மாற்றும் விஷயத்தில் தந்தைக்கும், மகனுக்கும் உரசல் போல... அதான், தனித்தனியா வந்துட்டு போறாங்க' என, தொண்டர்கள் முணுமுணுத்தனர்.
