PUBLISHED ON : ஜூலை 20, 2026 01:31 AM

கோவை கலெக்டர் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பங்கேற்றார்.
பின் அவர் அளித்த பேட்டியில், 'அரசு மாணவர் விடுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், போதுமான பணியாளர்கள் இல்லாததால், அடிப்படை வசதிகளில் சில குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.
அவரிடம், 'அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லை அதிகமாக இருக்கிறதே' என நிருபர்கள் கேட்டபோது, 'விரைவில் பெருச்சாளிகள் களையெடுக்கப்படும். தொடர் ஆய்வுகள் வழியே எல்லா பெருச்சாளிகளும் பிடிபடுவது உறுதி' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'நாம நிஜமான பெருச்சாளிகளை பற்றி கேட்டால், அமைச்சர் ஊழல் பெருச்சாளிகளை பற்றி பதில் தர்றாரே' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.
