PUBLISHED ON : ஜூலை 19, 2026 12:30 AM

சென்னை, மணலியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான சி.பி.சி.எல்., சார்பில், 'சுவச்சதா பக்வாடா' என்ற 15 நாள் தேசிய துாய்மை இயக்கத்தின் நிறைவு நிகழ்ச்சி, அந்நிறுவனத்திற்கு சொந்தமான ஆமுல்லைவாயல் வளாகத்தில் சமீபத்தில் நடந்தது.
இதில், மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி, வடசென்னை தி.மு.க., - எம்.பி., கலாநிதி, திருவொற்றியூர் த.வெ.க., - எம்.எல்.ஏ., செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேடை நிகழ்ச்சி முடிந்து, வளாகத்தில், 500 மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, சி.பி.சி.எல்., பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள், கொளுத்தும் வெயிலில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது, மரக்கன்றுகள் நடும் இடம் நோக்கி வந்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு குடை பிடிக்கப்பட்டது. ஊடகத்தினர் அதை கவனித்து படம் எடுக்க முயற்சிக்க, 'குடை வேண்டாம்' என, அமைச்சர் தடுத்து விட்டார்.
இதை பார்த்த இளம் நிருபர் ஒருவர், 'அமைச்சர் உஷாராகிட்டாருப்பா' என கூற, சக நிருபர்கள் சிரித்தனர்.
