PUBLISHED ON : ஜூலை 09, 2026 12:49 AM

கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் காவிரி பாயும் மாவட்டங்களில் பா.ம.க., தலைவர் அன்புமணி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், பவானி அந்தியூரில் சமீபத்தில் அவர் பேசுகையில், 'கர்நாடகாவில், காவிரியின் குறுக்கே ஏற்கனவே நான்கு அணைகள் உள்ளன. இப்போது மேகதாதுவில் இன்னொரு அணை கட்டுவதாக அம்மாநில அரசு சொல்கிறது. அந்த அணையில், 70 டி.எம்.சி., தண்ணீர் தேக்கலாம். அவர்களோ, பெங்களூரு குடிநீருக்கு தான் அணை கட்டுகிறோம் என்கின்றனர். அதற்கு, 5 டி.எம்.சி., தண்ணீர் போதும்.
'தமிழகத்தில், 28 மாவட்ட மக்கள் காவிரியை நம்பியுள்ளனர். இங்கு, சமூக வலைதளங்கள் வாயிலாக ஆட்சி மாற்றமே வந்துள்ளது. இதே சமூக வலைதளங்களை வைத்து, நாம் எல்லாரும் இணைந்து மேகதாது அணை கட்டுவதை தடுப்போம்' என்றார்.
இதை கேட்ட இளைஞர் ஒருவர், 'சமூக வலைதளங்களால் ஆட்சியை மாற்ற முடியுறப்ப, அணை கட்டுறதை தடுக்க முடியாதா என்ன?' என முணுமுணுக்க, சக இளைஞர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
