PUBLISHED ON : ஜூன் 29, 2026 12:40 AM

'மேகதாது அணை கட்டுவோம்' என கூறி வரும் கர்நாடக முதல்வர் சிவகுமாரை கண்டித்தும், 'பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்' என கோரியும், தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் சமீபத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, வல்லம் டி.எஸ்.பி., காயத்ரி, 'பச்சை துண்டு அணிந்து வரும் நபர்கள் யாரையும் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது' என கூறியதால், பச்சை துண்டு அணிந்தவர்களை எல்லாம் போலீசார் தேடி தேடி வெளியில் அனுப்பினர்.
இதை பார்த்த விவசாய சங்க நிர்வாகி ஒருவர், 'இந்த காக்கி மேடத்துக்கு பச்சை கலரை பார்த்தாலே, 'அலர்ஜி' போலிருக்கே...' என முணுமுணுத்தார்.
அருகில் இருந்த மற்றொரு விவசாயி, 'அது சரி... டி.எஸ்.பி., மேடம் வீட்டு சமையல்ல கூட பச்சை மிளகாய், பச்சை பட்டாணி சேர்க்க மாட்டாங்க போலிருக்கு...' என கூற, அங்கு பலத்த சிரிப்பலை எழுந்தது.
