PUBLISHED ON : ஜன 13, 2026 04:10 AM

சேலம் மாவட்டம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ., பொதுச் செயலரான இவர், சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், வீரபாண்டி தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார்.
கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் சமீபத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியின் பொதுக் கூட்டம் நடந்தது. இதற்கு வந்த பழனிசாமியை வரவேற்று, ராஜேந்திரன் வரவேற்பு பேனர்கள் வைத்திருந்தார். கூட்டம் முடிந்து பழனிசாமி புறப்பட்ட போது, அவரை சந்தித்து சால்வை அணிவித்து ஆசி பெற்றார்.
பின், நிருபர்களிடம் ராஜேந்திரன் கூறுகையில், 'வீரபாண்டி தொகுதியை, பா.ஜ.,வுக்கு கேட்டு வருகிறோம்; கிடைத்தால் சந்தோஷம். அ.தி.மு.க., போட்டியிட்டாலும் அவர்கள் வெற்றிக்கு பணியாற்றுவோம்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'கண்டிப்பா, எங்களுக்கு தொகுதியை தரணும்னு சொல்லாம, கூட்டணி தர்மத்தை மதிச்சி பேசுறாரே...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியேகலைந்தனர்.
