PUBLISHED ON : ஆக 04, 2026 12:00 AM

சட்டசபைத் தேர்தலில், கோவை மேற்கு தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக செந்தில் பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அத்தொகுதியில், தேர்தல் விதிகள் மீறப்பட்டதாக, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக, கோவை மாநகராட்சி தேர்தல் பிரிவு அலுவலகத்தில் இருந்த தேர்தல் கோப்புகளை, சமீபத்தில் ஈஸ்வரன் ஆய்வு செய்தார்.
பின் அவர் அளித்த பேட்டியில், 'கோவை மேற்கு தொகுதியில் பரிசுப் பொருட்களுக்கு டோக்கன் வழங்கியது தொடர்பாக, போலீசார் ஒன்பது புகார்களை வாங்கி, ரசீது கொடுத்துள்ளனர். ஆனால், அவற்றை முறையாக விசாரிக்காமல், புகார்களை முடித்து வைத்தது தவறு. எனவே, தேர்தல் ஆணையம் முறையாக விசாரித்து, செந்தில் பாலாஜியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என்றார்.
இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'ஏற்கனவே பல வழக்குகளில் சிக்கி, செந்தில் பாலாஜி முழி பிதுங்கிட்டு இருக்காரு... இவரும், அவரை துாங்க விடமாட்டார் போலிருக்கே' எனக் கூற, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
