PUBLISHED ON : ஏப் 14, 2026 01:44 AM

விருதுநகரில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக பொதுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது.
இதில், வேட்பாளர்கள் ஒவ்வொருவரையும் முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது, 'அருப்புக்கோட்டை தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும், சாத்துார் ராமசந்திரன், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்டவர். தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு திராவிட மாடல் ஆட்சியில், 23 லட்சம் பேருக்கு பட்டா வழங்கி சாதனை படைத்ததற்கு பொறுப்பேற்று செயல்பட்டவர்' என, பாராட்டி தள்ளினார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'சாத்துார் ராமசந்திரன் மட்டுமா... இன்று, தி.மு.க.,வில் செல்வாக்கா இருக்கும் பலரும், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா அடையாளம் காட்டியவங்க தானே...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்து சிரித்தனர்.
