PUBLISHED ON : செப் 05, 2011 12:00 AM

'அம்மா பாணியில்...!'
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், ராஜரத்தினம் தலைமையில், விஜயகாந்த் மன்றத்தினர், அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
வழக்கமான அன்னதான சாப்பாடு போடாமல், பக்தர்களுக்கு, தலைவாழை இலை போட்டு, வடை, பாயசத்துடன் விருந்து பரிமாறப்பட்டது. தினமும், அன்னதானம் செய்பவரின் பெயரை அறிவிப்பு பலகையில் எழுதி வைப்பது வழக்கம். அன்றய தினம், அன்னதான உபயதாரர், 'கேப்டன் விஜயகாந்த்' என கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. இதைப்பார்த்த மூத்த பக்தர் ஒருவர், 'ஜெயலலிதா அம்மாவுக்கு, வடிவுடையம்மன் இஷ்ட தெய்வம். கோவிலுக்கு அடிக்கடி வருவார்; நிறையவே செய்வார். அவர் பாணியிலேயே, விஜயகாந்த், அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருக்காரே... அம்மாவை பாலோ பண்ணினா நல்லதுங்கிறது, இப்போதாவது புரிஞ்சதே...' என, 'கமென்ட்' அடித்தபடி சென்றனர்.
'அமைச்சர் பொளச்சுக்குவார்!'
ஊட்டியில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. இதில், உணவுத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் பங்கேற்று பேசினார். அப்போது, 'தேர்தல் வாக்குறுதிபடி வீட்டுக்கு ஒரு பசு மாடு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்து, நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். இதை அறிவித்தபோது,'போகிற போக்கில் எல்லாரையும் மாடு மேய்க்க போகச் சொல்லிடுவாங்க போலிருக்கே' என, மற்ற கட்சியினர் விமர்சனம் செய்தனர். வீட்டுக்கு ஒரு பசு மாடு இருந்தால், கஷ்டங்கள் நீங்கி, லட்சுமி குடியிருக்கிற வீடாக மாறும். அதனால் செல்வம் பெருகும். வீட்டில் எல்லா வளமும் வந்து சேரும். மாடு என்றால் சாதாரணம் அல்ல' என்றார். இதைகேட்ட பெரியவர் ஒருவர், 'தட்டுத்தடுமாறி பேசிய அமைச்சர், இப்போது மக்களை கவரும் வகையில் பேசி, 'புத்தி'சந்திரனாகவே மாறிட்டார்; பொளச்சுக்குவார்' என, கமாண்ட் அடித்தபடி சென்றார்.

