PUBLISHED ON : ஜூன் 09, 2026 12:00 AM

பெரம்பலுார் மாவட்ட புதிய கலெக்டராக, பெண் அதிகாரியான ஷரண்யா ஹரி நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், எசனை ஊராட்சியில் இருந்த அங்கன்வாடி மையத்திற்கு ஆய்வுக்கு சென்ற ஷரண்யா ஹரி, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை, சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். 'சாப்பாடு குழந்தைகளுக்கு பிடிக்குதா?' என கேட்டு, அங்கிருந்த குழந்தைகளின் அம்மாக்களிடம் பேசிய அவர், 'குழந்தைகளை, காலையில தினமும் கொண்டு வந்து விடுவீர்களா... நீங்க எங்காவது வேலைக்கு போறீங்களா?' என கேட்டார். அதற்கு அப்பெண்கள், 'இல்லை, வீட்டில் தான் இருக்கிறோம்' என்றனர்.
உடனே கலெக்டர், 'குழந்தைகள் இங்கே ஜாலியா இருக்கட்டும்... நீங்க, அங்க ஜாலியா இருங்க... நானும் என் குழந்தையை அங்கன்வாடியில தான் சேர்க்கப் போறேன்' என்றார்.
இதை கேட்ட ஒரு பெண், 'கலெக்டர் பிள்ளையே இங்க வந்துட்டா, நம்ம பிள்ளைகளுக்கான கவனிப்பு இன்னும் சூப்பரா இருக்கும்டி...' எனக் கூற, சக பெண்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
