PUBLISHED ON : ஜன 24, 2025 12:00 AM

ஜனவரி 24, 1961
கோவையில், கந்தசாமி முதலியார் - வடிவம்மையார் தம்பதியின் மகனாக, 1878, பிப்ரவரி 20ல் பிறந்தவர் சுப்பிரமணிய முதலியார்.
இவர், கோவை அரசு உயர்நிலைப் பள்ளி, கலைக் கல்லுாரியில் படித்தார். சிவஞான முனிவரிடம் படித்த சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்த திருச்சிற்றம்பல பிள்ளையிடம், தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றார்.
சென்னை, மாநிலக்கல்லுாரியில் பி.ஏ., படித்து, 'பிராங்க்ளின்' தங்கப்பதக்கத்தை பெற்றார். மொழிபெயர்ப்பு, செய்யுள், கட்டுரைகளை எழுதுவதில் வல்லவரான இவர், சட்டம் படித்து, கோவில்கள் பற்றிய வழக்குகளில் வெற்றி பெற்றார். வ.உ.சி., நீலகண்ட பிரம்மச்சாரி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களுக்கு சட்ட உதவிகள் வழங்கினார்.
இவரின் உதவியை மறவாத வ.உ.சி., தன் மகனுக்கு இவரது பெயரையும், தன் மகளுக்கு இவர் மனைவி மீனாட்சியின் பெயரையும் சூட்டினார். இவர், பெரியபுராணம் உள்ளிட்ட பக்தி நுால்களுக்கு உரை எழுதினார். கோவை நகரசபை உறுப்பினர், சென்னை பல்கலை தமிழ்மொழி ஆணையர் பொறுப்புகளை வகித்துள்ள இவர், தன் 82வது வயதில், 1961ல் இதே நாளில் மறைந்தார்.
சைவத்தமிழ் வளர்த்த, 'சிவகவிமணி' மறைந்த தினம் இன்று!