PUBLISHED ON : மார் 06, 2025 12:00 AM

அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் சரவணன் அறிக்கை:
'இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழகம் இருப்பதற்கு
கருணாநிதியால் உருவாக்கப்பட்ட மருத்துவ கட்டமைப்பு தான் காரணம்'
என்ற பொய் மூட்டையை முதல்வர் ஸ்டாலின் அவிழ்த்து விட்டுள்ளார். உண்மை
நிலவரம் என்னவென்றால், தமிழகத்தின் சுகாதாரத்துறை 7வது
இடத்திற்கு பின்னோக்கி சென்று விட்டது. பழனிசாமி தலைமையிலான
அ.தி.மு.க., ஆட்சியில், 11 மருத்துவக் கல்லுாரிகள்
உருவாக்கப்பட்டன. ஆனால், தி.மு.க., ஆட்சியில் ஒரு அரசு மருத்துவக்
கல்லுாரி கூட உருவாக்கவில்லை.
தமிழக காங்., தலைவர்செல்வப்பெருந்தகை அறிக்கை: பிற மாநிலங்களின் நலனை பேசுவதற்காகவே தமிழக பா.ஜ.,வை ஒரு யூனிட்டாக வைத்துள்ளனர். தமிழகத்திற்கான பா.ஜ.,வாக இருந்தால் தமிழகத்தின் நலனை பற்றி பேச வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தில், குறைந்தபட்சம் தங்களது கருத்தை பா.ஜ., பதிவு செய்திருக்க வேண்டும். த.மா.கா.,வும், பா.ஜ.,வின் ஓர் அங்கமாக மாறி விட்டதால், பா.ஜ., சொல்வதையே கேட்கிறது.
'தி.மு.க.,வின் ஓர் அங்கமாக காங்கிரசும் மாறி பல வருஷங்களாகிடுச்சு' என்று த.மா.கா.,வினர் பதிலுக்கு குற்றம் சாட்டினால், இவர் ஏத்துக்குவாரா?
எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் கா.லியாகத் அலிகான் அறிக்கை: கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து, அன்றைக்கு மத்தியில் ஆண்ட காங்கிரஸ், மாநிலத்தில் ஆண்ட தி.மு.க., ஆட்சிகளை குறை சொல்கிறார் கவர்னர் ரவி. 'கச்சத்தீவு தமிழகத்திற்கு சொந்த மானது, இந்தியாவின் ஒரு பகுதி' என, எடுத்து சொன்னது அன்றைய முதல்வர் கருணாநிதி. எனவே, கவர்னர், மாநில அரசை குறைகூறக் கூடாது.
அதே கருணாநிதி தான், 'பேராசை பிடித்த மீனவர்கள், எல்லை தாண்டிச் செல்வதுதான் பிரச்னைக்கு காரணம்' என்றும் சொல்லியிருக்காரே!
பசுமை தாயகம் அமைப்பின்தலைவர் சவுமியா அன்புமணி பேட்டி: தமிழகத்தில் போதையை ஒழித்தால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். சமூக வலைதளங்களை பெண்கள் மிகவும் கவனத்தோடு பயன்படுத்த வேண்டும். பெற்றோர், நமக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். எனவே, அவர்களிடம் எந்த கடுஞ்சொல்லையும் கூறக்கூடாது; பெற்றோரை மதிக்க வேண்டும்.
பொதுமேடையில், தன் தந்தை ராமதாசுக்கு எதிராக கோபத்தை கொட்டிய அன்புமணிக்கும் இந்த, 'அட்வைஸ்' பொருந்துமா?