PUBLISHED ON : மார் 26, 2024 12:00 AM

தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழி பேச்சு: இந்த நாட்டை
பாதுகாக்க வேண்டும் என்றால் முதலில் நாம் தமிழகத்தை பாதுகாக்க வேண்டும்.
இந்த மண்ணில், ஒரு இடத்தில் கூட பா.ஜ., என்ற கட்சியை இரண்டாவது இடத்தில்
கூட வந்துவிடக் கூடாது என்பதை மனதில் வைத்து, தி.மு.க.,வினர் தேர்தலில்
பணியாற்ற வேண்டும்.
பா.ஜ.,வுக்கு இரண்டாமிடம் கூட கிடைக்கக் கூடாதுன்னா, அ.தி.மு.க.,வுக்கும் சேர்த்து தி.மு.க.,வினரை பணியாற்ற சொல்றாங்களா?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: குரங்கு தன் குட்டிகளை விட்டு ஆழம் பார்ப்பது போல், லோக்சபா தேர்தலில் பழனிசாமி வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளார். சிங்கம் வேட்டைக்கு தானே புறப்படுவது போல், பன்னீர்செல்வம் தானே வேட்டைக்கு புறப்பட்டுள்ளார்.
இவர் சொல்ற சிங்கத்தை காக்க வச்சு, கடுப்பேத்தி, கடைசியா ராமநாதபுரத்துல களமாட அனுப்பி இருக்காங்க... சிங்கம் வேட்டையில் ஏதாச்சும் சிக்குமா?
இந்திய ஜனநாயக கட்சி யின்,பெரம்பலுார் வேட்பாளர் பாரிவேந்தர் பேச்சு: கடந்த பார்லிமென்ட் தேர்தலில் ஆண்டிற்கு, 300 மாணவர்களை எஸ்.ஆர்.எம்., பல்கலையில் இலவசமாக படிக்க வைப்பேன்என்று கூறினேன். அதேபோல் ஐந்தாண்டில், 1,500 மாணவர்களை இலவசமாக படிக்க வைத்தேன். என்னை மீண்டும் வெற்றி பெற வைத்தால் வரும் ஐந்தாண்டுகளில் மாணவர்களை இலவசமாக படிக்க வைப்பேன். எனக்கு நீங்கள் ஓட்டு போட்டால் என் எதிர்காலம் மாற போவதில்லை; ஆனால், உங்கள் எதிர்காலம் மாறும்.
என்ன தான் பணம் கோடி, கோடியாய் இருந்தாலும், ஒருவேளை மத்திய அமைச்சர் ஆகிட்டீங்கன்னா, உங்க எதிர்காலமும், 'ஓவர் நைட்'ல மாறிடுமே!
உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து பேச்சு: ஓட்டுக்கு பணம் என்ற சூழல் நிலவி வரும் இன்றைய காலகட்டத்தில், ஓட்டுக்கு 1 ரூபாயும் தர மாட்டேன் என்று அண்ணாமலை அறிவித்ததற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். ஓட்டுக்கு பணம் என்ற கேவலமான நிலையை மாற்றி, வெற்றி, தோல்வியை பற்றி கவலைப் படாமல், ஊழல் இல்லா ஆட்சியை கொண்டு வரநினைக்கும் அண்ணாமலை முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும்.
உண்மையில் அவரது தைரியம் பாராட்டுக்குரியதே... ஆனால், பணம் தராமல் ஜெயிக்க முடியுமா என்ற எதார்த்தத்தையும் பார்க்கணுமே!

