PUBLISHED ON : மே 25, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: ஒரு
குடியிருப்புக்குள் நடக்கும் கருத்து வேற்றுமையை, காவல் துறைக்கு கொண்டு
சென்று, காவல் துறை அதிகாரிகளின் நேரத்தை தவறாக பயன்படுத்துவது முறையல்ல.
மெத்த படித்தவர்களும், அனுபவசாலிகளும், பெரியவர்களும், பொறுப்போடு,
பொறுமையோடு நடந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இரு நாட்டு
பிரச்னை கூட இப்பல்லாம் சத்தமில்லாம தான் இருக்கு... இந்த வீட்டு
பிரச்னைகளும், குறிப்பா, தம்பதியர் தகராறு தானே இப்ப வெட்டு, குத்து
வரைக்கும் போகுது!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: ஆவின் கொள்முதல் செய்யும் பால் அளவு 40 லட்சத்தில் இருந்து 20 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. இதனால், ஆவின் பால் பொருள் உற்பத்தி பாதிக்கப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு ஆவின் நிர்வாகத்தின் குளறுபடிகளே காரணம். நடைமுறை சிக்கல்களை களைந்து, பால் கொள்முதலை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பால் கொள்முதலை உயர்த்த முயற்சிக்கிற மாதிரி தெரியலையே... ஆவினுக்கு மூடுவிழா நடத்த திட்டமோ?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: 'ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு நடப்பது சந்தேகத்தை தருகிறது' என, பழனி சாமி கூறியுள்ளார். கோடநாடு பங்களாவில் மொத்த கேமராவும் செயலிழந்து, அதை பராமரித்த ஊழியர் மர்மமாக இறந்து போனபோது, பழனிசாமி கையில் காவல் துறை இருந்தது. அப்போது நான்காண்டு ஆட்சி நடத்திய பழனிசாமி என்ன செய்தார்?
கேமரா செயலிழந்தா என்னென்ன நடக்கும்னு தெரிஞ்சு தானே, அவர் சந்தேகத்தை கிளப்புறாருன்னு இவருக்கு தெரியலையா?
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழக நிறுவனர் மாயவன் பேட்டி: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இனியும் பொறுமை காக்க மாட்டோம். தேர்தல் முடிவு வந்ததும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில், தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஜாக்டோ- ஜியோவோடு சேர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவோம்.
திராவிட மாடல் அரசு அசையுற மாதிரி தெரியலையே... இந்த வருஷம் முழுக்க, அரசு ஊழியர்களுக்கு போராட்ட களத்துலயே காலம் கழிஞ்சிடுமோ?

