PUBLISHED ON : ஜூன் 02, 2024 12:00 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழகத்தில் கல்வி பெறும் உரிமை
சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் 25 சதவீத இட
ஒதுக்கீட்டில், மாணவர்களிடம் முழு கட்டணத்தை கேட்டு பள்ளி நிர்வாகங்கள்
நெருக்கடி கொடுக்கின்றன. அரசு வழங்கும் கட்டணம் குறைவாக இருந்தால்,
நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அதை விடுத்து ஏழை குழந்தைகளிடம் கட்டணம்
வசூலிப்பது அநீதி. இதை அரசு வேடிக்கை பார்ப்பதை அனுமதிக்க முடியாது.
அரசு வழங்கும் குறைந்த கட்டணத்தையும், குறித்த நேரத்தில் குடுத்தால், அவங்க ஏன் கட்டணம் கேட்கிறாங்க?
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: மக்கள் நலனுக்காக கொண்டு வரப்பட்ட பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில், சாதாரண அப்பாவி மக்களை ஏமாற்றி, அரசு அதிகாரிகள் நிதி மோசடி செய்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. தமிழக அரசின் விசாரணை என்பது, வெறும் கண் துடைப்பாக இல்லாமல்,தவறு செய்யும் அதிகாரிகள் அனைவரையும் கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசோட பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு என்பதால், திராவிட மாடல் ஆட்சியாளர்கள் கண்டுக்க மாட்டாங்க பாருங்க!
ஹிந்து தமிழர் கட்சி தலைவர்ராம ரவிகுமார் அறிக்கை: ஒவ்வொரு மனிதனுக்கும் வழிபாட்டு உரிமை இருக்கும் போது, மோடி தியானம் செய்தால், காங்கிரஸ்காரர்களுக்கு என்ன பிரச்னை. இமயமலை தியானத்தின் போது எதிர்க்காததற்கு காரணம் கடும் குளிரா? தற்போது கன்னியாகுமரி தியானத்தின் போது எதிர்க்க காரணம், மோடி அலையாக மாறி விடும் என்ற பயமா? மோடி பேசினாலும் பயம். மவுனமாக தியானம் செய்தாலும் பயம்.
இந்த பயம் தெளியுமா, இல்லை தொடருமான்னு ஜூன் 4ம் தேதி தெரிஞ்சிடும்!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: தி.மு.க., தேர்தல் அறிக்கையில், தமிழகம் முழுதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில், 3.50 லட்சம் இளைஞர்கள் நியமிக்கப்படுவர் என, வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதை நிறைவேற்றாததால், பொது மக்களுக்கு கிடைக்க வேண்டிய, அரசின் சேவைகள் உரிய நேரத்தில் கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது. முதல்வர் அலுவலகத்தில் காலியிடங்களை நிரப்ப முன்வராத தி.மு.க., அரசு, மற்ற துறைகளில் உள்ள பணியிடங்களை எப்படி நிரப்பும்?
முதல்வர் தனிப்பிரிவுக்கே இந்த நிலைமை என்றால், மற்ற அலுவலகங்கள் நிலை பரிதாபம் தான்!