PUBLISHED ON : ஆக 03, 2024 12:00 AM

பா.ம.க., மாநில பொருளாளர் திலகபாமா அறிக்கை: தமிழகத்தில் ஒவ்வொரு
கொலைகளுக்கு பின்னாலும், அரசியல் காரணங்கள் இருக்கின்றன. திட்டமிட்டு
அடுத்த தலைமுறையினருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் கொலைகளாக தான்
இருக்கிறது. தொடர் கொலைகளை தடுப்பதற்கு நிரந்தர தீர்வு காண, அனைத்து கட்சி
தலைவர்களை அழைத்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்க வேண்டும்.
எந்தெந்த கட்சியில், யார், யாருக்கு கொலை மிரட்டல் இருக்குன்னு பட்டியல் எடுத்துட்டு முதல்வரிடம் போக சொல்றாங்களோ?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'உதயநிதி தலைமையில் ஆட்சி வரும் போது, நிச்சயமாக, உங்களுக்கு ஸ்கூட்டர் கொடுக்கும் காலம் வரும்' என, பொன்முடி பேசி உள்ளார். அமைச்சர் பதவியில் இருந்து கொண்டே, ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி சரியில்லை என சொல்கிறாரே. ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டியது தானே.
அட, உதயநிதி தலைமையில் ஆட்சி நடந்தாலும், அமைச்சரா இருக்கணும்னு அவர் போடும், 'துண்டு' தான் அது!
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிக்கை: சென்னை மாநகராட்சியில் வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதி கட்டணம், 1,000 சதுர அடிக்கு, 46,000 ரூபாய் என்பது 1 லட்சம் ரூபாயாகவும், கோவை, மதுரை திருப்பூர் மாநகராட்சிகளில், 42,000 ரூபாய் என்பது 88,000 ரூபாயாகவும், திருச்சி, சேலம், தாம்பரம் மாநகராட்சிகளில், 30,000 என்பது 84,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுஉள்ளது. இதை அரசு திரும்ப பெற்று, பழைய கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.
இப்படி எல்லாம் தாறுமாறா கட்டணத்தை ஏத்துனா, மக்கள் அனுமதியே வாங்காம வீடுகளை கட்டிட்டு போயிட்டே இருப்பாங்க!
த.மா.கா., பொதுச் செயலர் யுவராஜா அறிக்கை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனி சாமி தலைமையிலான அரசு அத்திக்கடவு, அவிநாசி குடிநீர் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கி, 95 சதவீதம் வேலையை முடித்திருந்தது. தி.மு.க., ஆட்சியில் திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. பவானிசாகர் அணையின் உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளதால், நீரின் ஒரு பகுதி கடலில் வீணாக கலக்கவுள்ளது.
இப்ப தானே, கடந்த ஆட்சியின் அம்மா உணவகத்தை கவனிக்க ஆரம்பிச்சி இருக்காங்க... தேர்தலுக்கு முன் அத்திக்கடவு திட்டத்தையும் கவனிப்பாங்க!