PUBLISHED ON : டிச 08, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்அறிக்கை:
அம்பேத்கர் நினைவு நாளில், பட்டியல் சமூகத்தவருக்கு கழிவுநீர்
அகற்றும் வாகனம் வழங்கும் விழாவை அரசே நடத்துவது சமூகத்தில் என்ன
மாதிரியான உளவியல் போக்கை உருவாக்கும்? அம்பேத்கரின்
சமூகத்தவர்கள் கழிவு அகற்றத்தான் தகுதியானவர்கள் என கூறுகிறதா தி.மு.க., அரசு?
தமிழக பா.ஜ., விவசாய அணிதலைவர் ஜி.கே.நாகராஜ் பேச்சு: தி.மு.க.,வில் கிடைக்கும்பதவி, ஒரு சில குடும்பங்களின் வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுகிறது. ஆனால், பா.ஜ.,வில் ஒருவருக்கு கிடைக்கும் பதவி, இந்த நாட்டின் நன்மைக்காக, வளர்ச்சிக்காக பயன்படுகிறது.பா.ஜ.,வில் உறுப்பினராக இருப்பது மரியாதைக்குரியது;பதவியில் இருப்பது போற்றுதலுக்குரியது.
இவர் சொல்வது சரிதான்... பா.ஜ.,வில், நரேந்திர மோடிக்கு கிடைத்த பிரதமர் பதவியால், நாட்டின் வளர்ச்சி இன்று எங்கேயோ போயிடுச்சே!
தமிழக மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் சேம.நாராயணன் பேட்டி: பொங்கல் திருநாளில்,புதிய பானையில் புதிய அரிசி வைத்து, பொங்கலிட்டு கொண்டாடும் வகையில் ஒரு மண் பானையும், ஒரு மண் அடுப்பும் கொள்முதல் செய்து, ரேஷன் கார்டுதாரர்குடும்பத்திற்கு தி.மு.க., அரசு வழங்க வேண்டும். மண்பாண்டங்களில் உணவு சமைத்து சாப்பிட்டால் உடல்நலம் பயக்கும்; ஆரோக்கியமாக, 100 ஆண்டு காலம் மனித குலம் வாழ முடியும்.
'நான் ஸ்டிக்' பாத்திரங்கள் யுகமான இந்த காலத்துல, மண்பாண்டங்களை எந்த பெண்கள் சீண்டுறாங்க?
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: உலகமே பாராட்டும் வகையில்,விண்வெளி ஆராய்ச்சியில் மேலும் ஒரு மைல்கல்லாக, இந்தியாவின் 59வது பி.எஸ்.எல்.வி., திட்டம் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிக்குகடின உழைப்பையும், தொடர்முயற்சியையும் மேற்கொண்டஇந்திய மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்;வாழ்த்துகள். மத்திய அரசும்,விஞ்ஞானிகளுக்கு ஊக்கமளித்து, உறுதுணையாக இருந்து அவர்களின் குடும்பத்தினருக்கு உதவிகரமாக செயல்பட வேண்டும்.
வாஸ்தவம் தான்... மத்திய அரசு அளிக்கும் ஊக்கமும், உற்சாகமும் தான், விஞ்ஞானிகள் இன்னும் பல உயரங்களை எட்ட உதவும்!