PUBLISHED ON : ஜன 17, 2025 12:00 AM

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: இந்திய பெருங்கடல்
பகுதியில், டிக்கோகார்சியா தீவு அருகில் மீன் பிடித்துக்
கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 10 பேரை, பிரிட்டன்
கடற்படையினர் கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. எனவே, மத்திய
அரசு உடனே பிரிட்டன் அரசுடன் பேசி, கைது செய்யப்பட்டுள்ள தமிழக
மீனவர்களை மீட்க வேண்டும்.
தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன் அறிக்கை: கவர்னர் ரவிக்கு தன்னிலை மறந்து விட்டதா. கவர்னர் என்ற பொறுப்பிற்கு அவமான சின்னம் அவர். தமிழக அரசையும், முதல்வரையும் தொடர்ந்து எதிரியாக எண்ணும் அவரது போக்கு, அரசியல் சாசன பதவிக்கு அவர் தகுதியற்றவர் என்பதை காட்டுகிறது.
கவர்னருக்கு எதிராக காட்டமாக அறிக்கை விடுவதில், தி.மு.க.,வினர் இடையே கடும் போட்டியே நடக்கும் போல தெரியுதே!
தமிழக காங்., பொதுச்செயலர் ரமேஷ்குமார் பேச்சு: தமிழகத்தில் இருந்து ஜி.எஸ்.டி., வாயிலாக, அதிக அளவில் நிதியை பெற்றுக் கொள்ளும் மத்திய அரசு, வரி பகிர்வில் மட்டும் தமிழகத்திற்கு பாரபட்சம் காட்டுகிறது. பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக அளவில் வரி பகிர்வும், 'இண்டியா' கூட்டணி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு குறைந்த அளவு நிதியை வரி பகிர்வாகவும் வழங்குகிறது.
மற்ற திட்டங்களுக்கு மத்திய அரசு தரும் நிதியை, தமிழக அரசை முதல்ல சரியா செலவு பண்ண சொல்லுங்க... அப்புறமா குறை கூறலாம்!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் அரசு சார்பிலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் சார்பிலும் வழங்கப்படும் பரிசுகள், வாழ்வாதாரம் வழங்குபவையாக இருக்க வேண்டும். 'போட்டிகளில் அதிக காளைகளை அடக்குபவர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்' என, கடந்த ஆண்டு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி அறிவித்திருந்தார். அந்த வாக்குறுதியை உடனே செயல்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலப்ப கொடுத்த வாக்குறுதிகளே இன்னும் பெண்டிங்குல கிடக்குது... இதுல, போன வருஷ வாக்குறுதி எல்லாம் நடக்கிற காரியமா என்ன?