PUBLISHED ON : பிப் 11, 2025 12:00 AM

விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி: டில்லியில்
இரண்டு முறை ஆட்சியில் இருந்த, ஆம் ஆத்மி, 'இண்டியா' கூட்டணியை
பாதுகாத்து பலப்படுத்தி இருக்க வேண்டும். ஆம் ஆத்மியின் ஆணவம்,
அகங்காரத்தால் தான் தோல்வியை தழுவி இருக்கின்றனர். காங்கிரஸ்
தோல்விக்கும், ஆம் ஆத்மி கட்சி தான் காரணம்.
தமிழ்நாடு பனை தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேட்டி: பனை தொழிலாளர்கள், பதநீரை இறக்கி விற்பனை செய்வதோடு, கருப்பட்டி தயாரிக்கின்றனர். மீதமுள்ள பதநீர் புளித்து கள்ளாக மாறி விடுகிறது. கள்ளச்சாராய தடுப்பு சட்டத்தில், பனை தொழிலாளர் களை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். அந்த தடுப்பு சட்டத்தில் இருந்து பனை தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என, முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க இருக்கிறோம்.
ஆனா, சில தொழிலாளர்கள் வேண்டுமென்றே பதநீரை புளிக்க வைத்து, கள்ளாக மாற்றி விற்குறாங்களே... அவங்களை என்ன பண்றது?
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் கருப்பு முருகானந்தம் பேட்டி: தமிழகத்தில் பெண்கள் நடமாட முடியாத அளவுக்கு காட்டாட்சி நடக்கிறது. தி.மு.க., அரசு எதற்கும் கையாலாகாத அரசாக இருக்கிறது. பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக, மிகக் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபடுபவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும்.
பாலியல் குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை என்ற கடுமையான சட்டத்தை நிறைவேற்ற, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாமே!
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுப்பிய பொய்யான கோட்டை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தகர்க்கப்பட்டுள்ளது. ஈ.வெ.ரா.,வை தொட்ட பின், சீமானின் அரசியல் சரிவை நோக்கி செல்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி, நல்லாட்சிக்கு கிடைத்த அத்தாட்சியாக விளங்குகிறது.
ஆனா, இந்த வெற்றி அடுத்த வருஷம் பொதுத் தேர்தல்லயும் தொடரும் என்று மட்டும் எதிர்பார்த்து, அசால்டா இருந்துடாதீங்க!

