PUBLISHED ON : பிப் 19, 2025 12:00 AM

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி: 'ஜாதிவாரி
கணக்கெடுப்பு நடத்துவது, மத்திய அரசு கையில்தான் உள்ளது' என, தமிழக அரசு
கூறுவது ஏற்புடையது அல்ல. தற்போதுவரை நான், தி.மு.க., கூட்டணியில் தான்
உள்ளேன். த.வா.க.,வுடன் தமிழ் தேசியத்தை விரும்பும் அமைப்புகள் பேச்சு
நடத்தி வருகின்றன. அவர்களுடன் கலந்து பேசி, 2026 சட்டசபை தேர்தலுக்கான
நிலைப்பாடு குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ் தேசியத்தை சீமான்தான் தொடர்ந்து பேசிட்டு வர்றாரு... அவரது கட்சியுடன் கூட்டணி அமைக்க போகிறாரோ?
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி: தமிழகம் மட்டும்தான் பாதுகாப்பான மாநிலம். இங்கு அனைத்து மாநில மக்களும் பாதுகாப்பாக இருக்கின்றனர். வெளி மாநிலங்களில் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் பாதுகாப்பில்லை. தமிழகம் மட்டும்தான் அமைதிப் பூங்காவாக இருந்து வருகிறது.
அப்படியா... இவரது கட்சியின் ஆட்சி நடக்கும் கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கூட யாருக்கும் பாதுகாப்பு இல்லன்னு சொல்றாரா, என்ன?
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலர் ஈஸ்வரன் பேச்சு: ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சமீபத்தில், 500க்கும் மேற்பட்ட ஆடுகள், தெருநாய்கள் கடித்து இறந்துள்ளன. ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வாதாரத்தை அரசு சிந்திக்க வேண்டும். பூங்காவில் சிறுவர்களையும், தெருக்களில் பெண்களையும் நாய்கள் கடிப்பதை பார்க்க முடிகிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களை பாலியல் ரீதியாக வேட்டையாடும் காமுகர்களையே இந்த அரசாங்கத்தால கட்டுப்படுத்த முடியலை... இதுல, தெருநாய்களை கட்டுப்படுத்திடு வாங்களாக்கும்?
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி: தமிழகத்தில், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கும்போது, தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போட்டிகளில் உயிரிழப்போருக்கு 20 லட்சம் ரூபாய் வரை நிவாரணம் வழங்க வேண்டும்.
இவர் சொல்வது சரிதான்... ஆனா, 'ஜல்லிக்கட்டு வீரர் களுக்கு அரசு வேலை குறித்து பரிசீலிக்கப்படும்' என்ற உதயநிதியின் வாக்குறுதிக்கே இன்னும் வழியை காணோமே!

