PUBLISHED ON : பிப் 09, 2024 12:00 AM

த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா பேச்சு:
காமராஜருக்கு பின்
தமிழகத்தின் பட்டி, தொட்டி எங்கும் கல்விக்கு புத்துயிர் ஊட்டியவர்
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தான். காமராஜர் கிராமந்தோறும்
கல்விச்சாலைகளை திறந்தார். மாவட்டந்தோறும், மருத்துவக் கல்லுாரிகளை
பழனிசாமி திறந்தார். அவர், வரும் 2026ல் இரண்டாவது முறை தமிழக முதல்வர்
பதவியை ஏற்பார். இதை நான் பெருமையோடு மட்டுமல்ல, உரிமையோடும் கூறிக்
கொள்கிறேன்.
இவரது தலைவர் வாசனை கூட இந்த அளவுக்கு புகழ்ந்து தள்ளியிருப்பாரான்னு தெரியலையே!
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: மழை அல்லது மழையில்லாமல் பாதிக்கப்பட்ட எந்த ஒரு விவசாயிக்கும் இழப்பீடு கிடைத்தால் தான், அவர்களால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியும். எனவே, தமிழக அரசு காலம் தாழ்த்தாமல், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விளை நிலத்திற்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான தனி ஒரு விவசாயி பாதிப்படைந்தாலும், இழப்பீடு வழங்கப்படும் என்பதையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.
அடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு தயாராகிட்டு இருக்கிறவங்க, பழசை எல்லாம் மறந்திருப்பாங்க!
தி.மு.க.,வினருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: 'திராவிட மாடல்' அரசின் அயராத முயற்சியால், தமிழகத்தின் தொழில் துறையில் முன்பு சூழ்ந்திருந்த இருளும், பனியும் விலகி, வெளிச்ச கதிர்கள் பாயத் துவங்கியிருக்கின்றன. ஐரோப்பாவின் தனித்துவமான நாடுகளில் ஒன்று ஸ்பெயின் என்பதையும், எந்தெந்த வகையில் அது முக்கியமானது என்பதையும் இந்த 10 நாள் பயணத்தில் அறிந்து கொள்ள முடிந்தது.
அங்கு போடப்பட்ட ஒப்பந்தங்கள் எல்லாம் அடுத்தடுத்து செயல்பாட்டுக்கு வந்தால், முதல்வரின் 10 நாள் பயணமும் பயனுள்ளதாக அமையும்!
மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களுக்கு உரிய நிதி பகிர்வு அளிக்க, மத்திய அரசு தொடர்ந்து மறுக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, டில்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் மாநில உரிமைகளையும், கூட்டாட்சி கோட்பாட்டையும் பாதுகாக்கும் போராட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். அதற்கு, பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
டில்லியில போராட்டம் நடத்தினா, இவங்க கோரிக்கை நிறைவேறிடும்னு நினைக்கிற அளவுக்கு அப்பாவியா இவங்க?

