PUBLISHED ON : பிப் 21, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை:
கடந்த
1980ல் நடந்த சட்டசபை தேர்தலில், எம்.ஜி.ஆருக்கு பெரிய வெற்றி தந்த
மக்கள், அதற்கு முன் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., - காங்.,
கூட்டணிக்கு 38 தொகுதிகளில் வெற்றியை தந்தனர். கோபிச்செட்டிபாளையம்,
சிவகாசி என, இரு தொகுதிகளில் தான் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. அன்று
எம்.ஜி.ஆருக்கே இரண்டு என்றால், இன்று பழனிசாமிக்கு பூஜ்யம் தான்.
இப்ப
பூஜ்யம் தான் கிடைக்கும்னு பழனிசாமிக்கும் தெரியும்... அடுத்து சட்டசபை
தேர்தலில் எம்.ஜி.ஆர்., மாதிரி ஆட்சியை பிடிச்சிடுவாரா என்பது தான் கேள்வி!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: கோவை மாவட்ட அரபி கல்லுாரி பேராசிரியர் சையது அப்துல் ரகுமான் உமரி மற்றும் முன்னாள் மாணவர்கள் முகமது உசேன் பைசி, இர்ஷாத், ஜமீல் பாஷா உமர் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. தமிழகம் முழுதும் ரகசிய கூட்டங்கள் நடத்தி, ஐ.எஸ்., அமைப்புக்கு ஆட்களை சேர்த்து, நிதி திரட்டுதல், வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பாக வகுப்பு எடுத்துள்ளனர். இச்செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இவ்வளவு நடந்திருக்கு... தமிழக உளவுத்துறை கும்பகர்ணனா மாறிடுச்சா என்ன?
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: வள்ளலார் பக்தர்கள் கூடும் வடலுார் பெருவெளியை, வள்ளலார் பன்னாட்டு ஆய்வு மையம் என்ற பெயரில் கையகப்படுத்த நினைப்பது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இது வள்ளலாரின் மெய்யியல் நோக்கத்தையே சிதைத்து விடும். வடலுார் பெருவெளியில் வள்ளலார்ஆய்வு மைய திட்டத்தை கைவிடா விட்டால், மாபெரும் மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும்.
யார் எதிர்த்தாலும் வள்ளலார் ஆய்வு மையம் வரும்னு சொல்லி அடிக்கல்லும் நாட்டிட்டாங்க... சட்டுபுட்டுன்னு போராட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க!
பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் பேச்சு: அடுத்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று, அண்ணாமலை முதல்வராவது உறுதி. இதை தடுக்க தி.மு.க., - அ.தி.மு.க.,ரகசிய கூட்டணி அமைத்துள்ளன. ஓராண்டு காலம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை, அண்ணாமலையை விமர்சித்த ஒரே காரணத்திற்காக, தற்போது உதயகுமாருக்கு அளித்துள்ளனர்.
எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற வகையில், ரெண்டு கட்சிகளும் கூட்டு சேர்ந்துடுச்சோ?

