PUBLISHED ON : ஏப் 18, 2025 12:00 AM

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., தலைமை
பலவீனமாகி விட்டது. இதை அழகாக, நேர்த்தியாக தங்களுக்கேற்ப பா.ஜ.,
பயன்படுத்தி வருகிறது. அ.தி.மு.க., பலவீனத்தை பயன்படுத்தி,
மிரட்டல் வாயிலாக அக்கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, எந்த கட்சியையும் அழிப்பதற்கு முன், அக்கட்சியோடு
கூட்டணி ஏற்படுத்தி உறவாடுவது பா.ஜ.,வின் வழக்கம்.
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் முருகானந்தம் பேச்சு: பெண்களையும், சைவ, வைணவ சமயத்தையும் கொச்சைப்படுத்தி பேசிய அமைச்சர் பொன்முடியின் வனத்துறை அமைச்சர் பதவியை பறித்து, அவர் அரசியல் துறவறம் பூண்டு, வனவாசம் செல்ல நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். கண்துடைப்புக்காக, கட்சியின் துணை பொதுச்செயலர் பதவியை பறித்து, மன்னிப்பு கேட்டு விட்டால் மட்டும் அவர் பேசிய பேச்சு புனிதமாகி விடாது.
நடப்பது தி.மு.க., ஆட்சி என்பதால், வனவாசம் போனாலும், அங்கேயும் பொன்முடிக்கு ராஜமரியாதை தான் கிடைக்கும்!
தி.மு.க.,வில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள முன்னாள் செய்தி தொடர்பு செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: தமிழக மசோதாக்களை நிறைவேற்றி தராமல் தாமதப்படுத்தியதாகவும், மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் சில பரிந்துரைகளை வழங்கி இருக்கலாம். அதன் அடிப்படையில், மசோதாக்களை ஜனாதிபதி நிறைவேற்றி தருவதற்கு வழி வகைகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அதை அறிவுறுத்தி இருக்கலாம். அதை விட்டுவிட்டு எதற்கு இந்த தீர்ப்பு என்று புரியவில்லை.
தி.மு.க., கொண்டாடிட்டு இருக்கும் தீர்ப்புக்கு எதிராக கருத்து சொல்லி, 'இனி தி.மு.க., சகவாசமே வேண்டாம்'னு முடிவு பண்ணிட்டாரோ?
இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலர் முத்தரசன் பேட்டி: அமைச்சர் பொன்முடி கருத்து மிக தவறானது. அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. தவறை உணர்ந்து, பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். தவறு செய்தவரே மன்னிப்பு கேட்டார் என்றால் மன்னிப்பது நம் பண்பாடு. அதே சமயத்தில், அவர் பேசியதை நான் நியாயப்படுத்தவில்லை.
அப்படி என்றால், ஊழல் பண்ணிட்டு மன்னிப்பு கேட்டாலும் விட்டுடணும்னு சொல்றாரோ?

