PUBLISHED ON : ஜூலை 30, 2025 12:00 AM

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலர் ஆனந்த் அறிக்கை: தமிழக 
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் 
நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதவாறு, தொண்டர்கள் விழிப்புடன் செயல்பட 
வேண்டும். கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளின்போது, பட்டாசு வெடிப்பதை 
தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் போக்கு வரத்திற்கு எந்த இடையூறும் 
ஏற்படுத்தக் கூடாது. அறிவுரை எல்லாம் அருமையா இருக்கு... ஆனா, கட்சியின் 
கொள்கை, கோட்பாடுன்னு சொல்றாரே... அதெல்லாம் என்னன்னு தொண்டர்களுக்கு 
கொஞ்சம் விளக்கியிருக்கலாம்!
  தமிழக காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அறிக்கை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் படங்களை மட்டும் வைக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம், 2023ல் சுற்றறிக்கை வெளியிட்டது. 'அம்பேத்கர் படத்தை அகற்றக் கூடாது' என்ற முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை தலைமை நீதிபதி ஏற்றார். சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து, அதே அறிவிப்பை உயர் நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டு உள்ளது வருத்தத்துக்குரியது. இப்போது வெளியிட்ட சுற்ற றிக்கையே, அம்பேத்கரின் படத்தை மட்டும் வைக்கக் கூடாது என்பதற்காகவே வெளியிடப்பட்டது போல் இருக்கிறது.
'அம்பேத்கர் படத்தை வைக்கக் கூடாது'ன்னு சுற்றறிக்கையில் சொல்லலையே... இவரா ஏன் பிரச்னையை கிளப்புறாரு?
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் , அனைத்து கட்சி தலைவர்களும் மக்களை சந்திக்க புறப்பட்டுள்ளனர். அவர்கள், கள் மீதான தடையை நீக்குவது குறித்து, அறிவிப்பு வெளியிட வேண்டும். அப்போதுதான், அறிவிப்பவர் வெற்றி பெற்று முதல்வராக முடியும். வரும் டிசம்பரில், திருச்சியில் கள் விடுதலை மாநாடு நடக் கிறது. அதில், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவங்க அழைப்பு விடுக்கிறது இருக்கட்டும்... சட்டசபை தேர்தல், 'பிசி'யில் இருக்கிற நிதிஷ் குமார் வருவாரா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி: தி.மு.க., வில் இன்று, இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளோம் என்கின்றனர். 'ஓரணியில் தமிழகம்' என்று, இரண்டு கோடி அல்ல, 10 கோடி உறுப்பினர்களை சேர்த்தோம் என அறிவித்தாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை. கொடுத்த, 525 தேர்தல் வாக்குறுதிகளில், 10 சதவீதத்தைக் கூட முதல்வர் நிறைவேற்றவில்லை.
தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையே, 8 கோடிக்குள்ள தான் என்பதால, தி.மு.க.,வினர் அப்படி எல்லாம், 'லாஜிக்' இல்லாம அடிச்சுவிட மாட்டாங்க!

