PUBLISHED ON : ஆக 27, 2025 12:00 AM

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குழுவின் அமைப்பாளர் பெங்களூரு புகழேந்தி அறிக்கை: மதுரையில்
த.வெ.க., தலைவர் விஜய் நடத்திய மாநாட்டிற்கு வந்த கூட்டத்தை சாதாரணமாக
எடுத்துக் கொள்ள முடியாது. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு அந்த
எழுச்சி மிகுந்த கூட்டம் காரணமாக அமையும் என்பதால், பலர் பொறாமையில் பேசி
வருகின்றனர். வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., வுக்கும்,
த.வெ.க.,வுக்கும் தான் போட்டி. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி நான்காவது
இடத்திற்கு தள்ளப்படும் . இந்த முடிவுக்கு என் பிரசாரமும் முக்கிய காரணமாக
இருக்கும். தன் பிரசாரத்தால, அ.தி.மு.க., நாலாவது இடத்துக்கு போயிடும்னு
எப்படி சிரிக்காம சொல்றாரு!
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் போர் வெறி, ஐரோப்பாவோடு முடியுமா அல்லது மூன்றாம் உலகப் போராக மூளுமா என்பதை இப்போது சொல்ல முடியாது. எல்லாம் கனிந்து வரும் போது கவிழ்த்து விடுவதை போல, டிரம்ப் - புடின் பேச்சின் பலனாக சமாதான உடன்படிக்கை எட்டும் என எதிர்பார்த்திருந்த நிலையில், ஜெலென்ஸ்கி, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களின் பொறுப்பற்ற பேச்சுகளும், நிபந்தனைகளும் மீண்டும் உக்ரைன் - ரஷ்யா போர் உக்கிரம் அடைவதற்கு வழிவகுத்து விடும்.
ச ம்பந்தப்பட்ட நாடுகளில் இவரது கட்சிக்கு கிளை அமைப்புகள் கூட இல்லையே... அப்புறமும் ஏன் இப்படி கவலைப்படுறாரு?
இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அகமது அறிக்கை: மதுரையில் த.வெ.க., மாநாடு வெற்றிகரமாக நடந்துள்ளது. பா.ஜ.,வை கொள்கை எதிரி என, மீண்டும் ஒரு முறை விஜய் பிரகடனப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் அதிகரித்து இருப்பது கவலைக்குரியது. ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும் என்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளின் குரலை வெளிப்படுத்திய விஜயை மனதார பாராட்டி வாழ்த்துகிறோம்.
தி.மு.க.,வையும் சேர்த்து தானே விஜய் விமர்சனம் செய்தாரு... அதை வரவேற்கிறாரா, இல்லையா?
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் முருகானந்தம் அறிக்கை: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் நெருங்கிய நண்பரும், கேரளாவின் பாலக்காடு தொகுதி காங்., - எம்.எல்.ஏ.,வுமான ராகுல் மாங்கூட்டத்தில் மீது சரமாரி யாக பாலியல் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ராகுல் மாங்கூட்டத்தில், தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் ராஜினாமா செய்யும்படி டில்லி மேலிடமும் வலியுறுத்த வேண்டும்.
'ராகுலே பதவி விலகு' என்ற கோஷத்தை எழுப்பி போராட்டம் நடத்த, பா.ஜ.,வுக்கு நல்ல வாய்ப் பு கிடைச்சிடுச்சே!