PUBLISHED ON : பிப் 06, 2026 03:43 AM

மா.கம்யூ., கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி பேச்சு:
ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியம், சென்னாகுளத்தில் சமுதாய கூடம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டதால், நாங்கள் போராடினோம். ஒரு மாதத்தில் கட்டுவதாக அதிகாரிகள் கூறினர்; ஆனால், நடக்கவே இல்லை. இவ்வாறு ஒரு அரசு நிர்வாகமே ஜாதி பாகுபாட்டுடன் செயல்பட்டால், ஏழை மக்களுக்கு எப்படி நியாயத்தை கொடுக்க முடியும். அரசு துறைகளில் ஜாதி ஆதிக்கம் நிலவுகிறது.
'திராவிட மாடல் ஆட்சியில், எல்லாருக்கும் எல்லாம்'னு முதல்வர் அடிக்கடி சொல்றதை கூட்டணி கட்சியான இவங்களே ஏத்துக்கலையே!
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை:
நிர்மலா சீதாராமன் அறிவித்த, மோடி வளர்ச்சி மாடல், 2026 - 27 பட்ஜெட்டில், தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், அதில் தி.மு.க.,வினர் ஊழல் செய்வதற்கான திட்டங்கள் இல்லை என்பது, முதல்வர் ஸ்டாலினுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அவர், பட்ஜெட் புத்தகத்தை நல்லெண்ணத்துடன் படித்து பார்த்து, தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதை, மனம் திறந்து அரசியல் நாகரிகத்தோடு வரவேற்க வேண்டும்.
தேர்தல் நேரத்தில், எதிர்க்கட்சி போட்ட பட்ஜெட்டை யாராவது பாராட்டுவாங்களா? அடுத்து வரவிருக்கும் தமிழக அரசின் பட்ஜெட்டை இவர் நல்லெண்ணத்துடன் பாராட்டுறாரான்னு பார்க்கலாம்!
தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை:
மங்கும் காலத்தில் அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய், தன் கேரியரின் மிச்சத்தை, உச்சம் என்கிறார். அதை தியாகம் என்கிறார். வரி கட்டாமல் மறைத்த சம்பள கணக்கை எல்லாம் சொல்லி, அந்த வருமானத்தை விட்டுவிட்டு வருவதாக, பரிதாபம் வேறு தேடுகிறார். பொது வாழ்க்கை என்பது தொண்டூழியம். அதை பண்டூழியமாக கணக்கு போட்டு, தற்பெருமை தேடலாமோ?
சினிமா வாய்ப்புகளை உதறி தள்ளிவிட்டு, அரசியலுக்கு வந்திருக்கும் துணை முதல்வர் உதயநிதியின் தியாகத்துக்கு முன்னாடி விஜய் எல்லாம் நிற்க முடியுமா?
தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி:
மத்திய அரசின் பட்ஜெட்டில், தமிழகத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. புதிய ரயில் திட்டங்கள் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். எதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எந்த அளவிற்கு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடந்து கொள்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
சென்னையில் இருந்து ஹைதராபாத், பெங்களூருக்கு அதிவேக ரயில்கள் இயக்கப்படும் என்பது புதிய ரயில் திட்டங்கள் இல்லையா?

