PUBLISHED ON : பிப் 07, 2026 02:03 AM

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பேட்டி: 'வரும் தேர்தலிலும் ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும்' என, தி.மு.க.,வினர் உறுதிமொழி எடுத்து இருக்கிறோம். முதல்வர் கூறியது போல், கருத்து கணிப்புகளை எல்லாம் கடந்து, இன்னும் அதிக மான இடங்களில் வெற்றி பெறுவோம். ஸ்டாலின் , தமிழக முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து, பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும், தொடர்ந்து நாங்கள் வெற்றி பெற்று கொண்டே இருக்கிறோம். நாங்கள் வென்றது இடங்களை அல்ல; மக்களின் மனங்களை. மக்களின் மனங்களை வெல்வதற்காக, என்னென்ன பணிகளை செய்ய வேண்டுமோ, அந்த பணிகளை செய்வோம். நிறைவேற்றப்படாத வாக் குறுதிகளை தந்து மக்களுக்கு, 'அல்வா' தராமல் இருப்பதே, நீங்க செய்யும் பெரும் பணியாக இருக்கும்!
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி பேட்டி: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசுவது எல்லாம் பொய். இனி அக்கட்சி ஆட்சிக்கு வரப்போவது இல்லை. சும்மா வாக்குறுதிகளை சொல்லிவிட்டு போகலாம் என, பழனிசாமி நினைக்கிறார். அவரை மக்கள் நம்ப மாட்டார்கள். ஆனால், முதல்வர் ஸ்டாலின் சொல்வதை மக்கள் நம்புவர்.
ஆமா... 'மாதாந்திர மின் கட்டணம், காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம், 3.50 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும்'னு ஸ்டாலின் சொன்னதை எல்லாம் நம்பிதான் 2021ல் மக்கள் ஓட்டு போட்டாங்க... ஆனா, அவற்றை எல்லாம் முதல்வர் நிறைவேற்றினாரா? தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் பேச்சு: தமிழகத்தில், மொத்தம், 68,000 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஆளும் தி.மு.க.,வே, 67,000 பூத் கமிட்டிகள் தான் அமைத்துள்ளது. ஆனால், பா.ஜ., சார்பில், 67,500 பூத் கமிட்டிகளை அமைத்து, தேர்தல் பணிகளை முன்னெடுத்துள்ளோம்.
அது சரி... 67,000 பூத் கமிட்டிகளை அமைத்த ஆளுங்கட்சி, அதன் நிர்வாகிகளுக்கு அடிக்கடி பண பட்டுவாடா செய்து, உயிரோட்டமா வச்சிருக்கு... ஆனா, இவங்க அப்படி எதுவும் பண்ற மாதிரி தெரியலையே... பிள்ளைக்கு பேரு வச்சா மட்டும் போதாது; சோறும் வைக்கணும்! தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி: விஜய், சினிமாவில் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம். மக்களுக்கான தலைவர் என்றால், அதற்கென்று தகுதியை வளர்த்து கொள்ள வேண்டியது அவரது கடமை. கட்சி தலைவராக இருந்து கொண்டு, ஆண்டு விழாவில் டான்ஸ் ஆடுவதுதான் கொள்கை என்றால், இவர் எல்லாம் நாளைக்கு மக்களுக்காக என்ன செய்ய முடியும்? கூட்டத்தை கூட்டலாம்; அவ்வளவுதான். எல்லாரும் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது.
ஒரே ஒரு சூரியன், ஒரே ஒரு சந்திரன் என்பது போல, உலகத்தில் ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.,தான்... அவரை மிஞ்ச யாராலும் முடியாது!

