PUBLISHED ON : பிப் 08, 2026 02:05 AM

தமிழக துணை முதல்வர் உதயநிதி பேச்சு: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. பெண்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றுதான்... நமது ஆட்சி தொடர வேண்டும்; ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும். அதற்கு பெண்கள் இன்னும் இரண்டு மாதங்களுக்கு, நம் அரசின் திட்டங்களை, மக்களை சந்தித்து எடுத்துக்கூற வேண்டும். ஒவ்வொரு ஓட்டுகளையும் உதயசூரியனுக்கு கிடைக்கும் வகையில், தேர்தல் பணிகளை பெண்கள் செய்ய வேண்டும்.
'உங்களுக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத்தொகை தர்றோமே... அதுக்கு பிரதிபலனா, ரெண்டு மாதம் உழையுங்க'ன்னு சொல்லாம சொல்றாரோ?
தமிழக பா.ஜ., செயலர் வினோஜ் பி.செல்வம் பேச்சு: தி.மு.க., தோற்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளும் சேர வேண்டிய இடம் பா.ஜ., கூட்டணி தான். ஆனால், தி.மு.க.,விற்கு வெற்றி தேடி தர வேண்டும் என்பதற்காகவே, கூட்டணிக்கு த.வெ.க., வராமல் உள்ளது. 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நடிகர் கமல் செயல்பட்டது போல், தற்போது விஜய் செயல்பட்டு வருகிறார். கமல், விஜய் என இரண்டு நடிகர்களும் சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்து, தற்போது தி.மு.க.,விற்கு சாதகமாக வேலை செய்கின்றனர்.
இவர் சொல்றதை பார்த்தால், 2031 சட்டசபை தேர்தலப்ப, தி.மு.க., கூட்டணியில் விஜய் சேர்ந்து, ராஜ்யசபா எம்.பி., ஆகிடுவாரோ?
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி: காங்கிரசின் பிரவீன் சக்கரவர்த்தி, எங்கள் கூட்டணியை பொருந்தா கூட்டணி என்று எப்படி கூறலாம். காங்கிரஸ் இன்று தனியாக நிற்க தயாராக உள்ளதா? எப்படியாவது விஜயுடன் சேர்ந்து விடலாம் என்று பேச்சு நடத்தினர். அது முடியாமல், திரும்பவும் தி.மு.க., கூட்டணியில் உள்ளனர். அவர்கள் கூட்டணிதான் பொருந்தா கூட்டணி.
இனி, 'தி.மு.க., தரும் தொகுதிகளை கைகட்டி, வாய் பொத்தி வாங்கிட்டு போறதை தவிர, காங்கிரசுக்கு வேற வழியில்ல'ன்னு சொல்ல வர்றாரோ?
நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் பாக்கியராசன் அறிக்கை: ஈழ இனப்படுகொலை காலத்தில், காங்கிரசையும், தி.மு.க.,வையும் எதிர்த்து தன்னலமற்ற போராளியாக உருவான, வி.சி., தலைவர் திருமாவளவன், 'காங்கிரசை வேரோடு அழிப்பேன்' என, சபதமிட்டார். ஆனால், அவரே தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் இடம்பிடித்து நீடித்து வருவது ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது. அவர் அம்பேத்கரிய, தமிழ் தேசிய அரசியலில் இருந்து விலகி விட்டார்.
தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதால் தான், இன்று மாநில கட்சி அந்தஸ்தை வி.சி.,க்கள் வாங்கியிருக்காங்க... கொள்கை பேசி கொண்டிருந்தால், இவங்களை போல முட்டுச்சந்தில் தான் நிற்கணும்!

