PUBLISHED ON : பிப் 23, 2026 02:10 AM

நடிகர் சத்யராஜ் மகளும், தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலருமான திவ்யா பேச்சு:
மக்களுக்கு என்ன தேவை என்ற புரிதல், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் இல்லை. பின், மக்கள், உங்களுக்கு வாக்களிப்பர் என எப்படி எதிர்பார்க்க முடியும்? த.வெ.க., தொண்டர்களுக்கு ஒரு சவால் விடுகிறேன்... உங்களால் முடிந்தால், மூன்று நாட்களுக்குள், உங்கள் தலைவர் விஜயுடன் புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் ஒன்றான, என், 'இன்ஸ்டாகிராம்' பக்கத்திற்கு அனுப்புங்கள். விஜய்க்கு ஒரு சவால்... உங்கள் கட்சியில் உள்ள, 10 தொண்டர்களின் பெயரை, எழுதி வைத்து படிக்காமல் சொல்லுங்கள் பார்க்கலாம்.
இதென்ன பிரமாதம்... பத்தில்லை, 100 பெயரை கூட விஜய் சொல்லிட்டு, அவங்க எல்லாம் என் கட்சியில் தான் இருக்காங்கன்னு சொல்லிட்டா இவங்க என்ன செய்வாங்களாம்?
த.வெ.க., இணை பொதுச்செயலர் நிர்மல் குமார் பேட்டி: தி.மு.க., - அ.தி.மு.க., போல பெரிய பண பலத்துடனும், மக்களிடம் சுருட்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை வைத்தும், நாங்கள் அரசியல் செய்யவில்லை. 'ஊழல் இல்லாத அரசியலை தருவேன்' என்று, மக்களிடம் விஜய் வாக்குறுதி கொடுத்துள்ளார். சுதந்திர போராட்டத்திற்கு பின், ஒட்டுமொத்த மக்களும் சேர்ந்து, காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் செய்து, அவர்களை எப்படி ஆட்சிக்கு கொண்டு வந்தனரோ, அதுபோல், ஒவ்வொரு மக்களும் த.வெ.க.,விற்காக பிரசாரம் செய்கின்றனர்.
ஆனா, இவங்க தலைவர் விஜய் மட்டும் வீட்டை விட்டு வெளியில வராம, வீடியோ பிரசாரம் பண்ணி ஆட்சியை பிடிக்க பார்க்கிறாரே!
பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் பேட்டி: தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டில், மக்கள் நலத்திட்டங்கள் ஏதுமில்லை; தொலை நோக்கு பார்வை இல்லை. இது, மக்களை ஏமாற்றும் பட்ஜெட். இதை பட்ஜெட் என்றே சொல்ல முடியாது. தி.மு.க., அரசு, மக்களை இருண்ட நிலைக்கு தள்ளுகிறது. இந்த பட்ஜெட்டுக்கு முட்டை மதிப்பெண்தான் கொடுக்க முடியும்.
தி.மு.க.,வினரிடம் கேட்டா, 'மத்திய அரசு நிதி தராம வஞ்சிக்கிறதால இப்படித்தான் பட்ஜெட் போட முடியும்'னு சாக்கு போக்கு சொல்வாங்க!
தேனி தி.மு.க., - எம்.பி., தங்கத்தமிழ் செல்வன் பேட்டி: காங்கிரஸ் இழுபறியில் இருப்பதாக பத்திரிகையாளர்கள் தான் சொல்கின்றனர். காங்கிரஸ் எங்களோடு தான் இருக்கும். மத்தியில் பா.ஜ.,வை எதிர்த்து போராடுகிறோம் என்றால், காங்கிரசிற்காகத்தான் போராடுகிறோம்; எங்களுக்காக அல்ல. அதை புரிந்து கொண்டு, காங்கிரசார் எங்களோடு கூட்டணியில் தொடர்வர். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
' காங்., மட்டும் இல்லாட்டா, மத்திய பா.ஜ.,வுடன் நாங்க சமரசம் பண்ணிக்குவோம்'னு சொல்லாம சொல்றாரோ?

