PUBLISHED ON : பிப் 26, 2026 03:07 AM

தி.மு.க., வர்த்தகர் அணி மாநில செயலர் காசிமுத்து மாணிக்கம் அறிக்கை: 'தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்ததற்காக விஜயகாந்த் ஆன்மா, பிரேமலதாவை
மன்னிக்காது' என, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசையும், அ.தி.மு.க.,
பொதுச்செயலர் பழனிசாமியும் கதறுகின்றனர். ஆன்மாவில் எங்களுக்கு
உடன்பாடில்லை. ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், தன் திருமணத்தை
கருணாநிதி தலைமையில் நடத்தி மகிழ்ந்தவர், விஜயகாந்த். அதனால், கருணாநிதி
கட்சியுடன் பிரேமலதா சேர்ந்ததற்காக விஜயகாந்த் ஆன்மா மகிழுமே தவிர
வருந்தாது.
அப்படிப்பட்ட விஜயகாந்த், 2011 சட்டசபை தேர்தலில்,
கருணாநிதி வருந்தி வருந்தி அழைத்தும், தி.மு.க., அணிக்கு வராம, அ.தி.மு.க.,
அணிக்கு ஏன் போனாராம்?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: 'கேரள அரசின், நவகேரளா குடிமக்கள் பதிலளிப்பு திட்டம், நிர்வாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக இருக்கிறது' எனக் கூறி, அத்திட்டத்தை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தி.மு.க., அரசு செயல்படுத்தும், 'உங்கள் கனவை சொல்லுங்கள்' திட்டத்திற்கும், 'வெல்வோம் ஒன்றாக' விளம்பரத்திற்கும், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பொருந்தும். இது குறித்து தேர்தல் கமிஷனும், உச்ச நீதிமன்றமும், தாமாக முன் வந்து நடவடிக்கை எடுக்கலாம்.
தேர்தல் தேதியை அறிவித்த பிறகு தான், தேர்தல் கமிஷனுக்கு வீரம் வரும்... அது வரை அது பல் இல்லாத பாம்புதான்!
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'இண்டி கூட்டணிக்கு தலைமை ஏற்பீர்களா' என்ற கேள்விக்கு, 'என் உயரம் எனக்கு தெரியும். அந்த உயரத்தின் அடிப்படையில், நான் இருப்பேன்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால், அவரது அமைச்சர்களின் கை நீளம், அவருக்கு தெரியவில்லையோ?
எந்தெந்த அமைச்சர் எப்படியிருப்பார்னு தெரிஞ்சு தானே, துறைகளை முதல்வர் ஒதுக்கீடு செய்தார்... அவருக்கு தெரியாம, அரசில் அணுவும் அசையாதே!
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி: தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவின் துறையில் மட்டும், 2,300 கோடி ரூபாய் ஊழல் என்றால், குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் அத்தனை பேரும் செய்திருக்கிற ஊழல்களை கணக்கிட்டால், மக்கள் பணம் எவ்வளவு சுரண்டப்பட்டு இருக்கிறது என்பதை நன்றாகவே புரிந்து கொள்ள முடியும். மக்களின் பணத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும்.
தே.ஜ., கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க.,வினர் அப்பழுக்கற்றவர் கள்னு நினைக்கிறாங்களோ?

