PUBLISHED ON : மார் 06, 2026 03:02 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: 'பா.ஜ.,வை தமிழகத்தில்
காலுான்ற செய்தது, அ.தி.மு.க., தான்' என்ற அவதுாறு செய்தியை, தி.மு.க.,
கூட்டணியினர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். 1984ம் ஆண்டு சட்டசபை
தேர்தலில், கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாப புரத்தில் பா.ஜ., தனித்து
வெற்றி பெற்றது. அதன்பின், 2001 சட்டசபை தேர்தலில், பா.ஜ., உடன் தி.மு.க.,
கூட்டணி அமைத்து, நான்கு தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற காரணமாக இருந்தது.
இந்த வரலாற்று உண்மையை மறைத்து, அ.தி.மு.க., மீது பழி போடுவது, அவர்களின்
சந்தர்ப்பவாத அரசியலையே பிரதிபலிக்கிறது. ' கடந்த, 1998 லோக்சபா தேர்தல்ல,
பா.ஜ.,வை அ.தி.மு.க., கூட்டணியில் சேர்த்து, வாஜ்பாயை தமிழக மக்களுக்கு
அறிமுகம் செய்ததே நான் தான்'னு இவங்க தலைவி ஜெ., பேசியதை இவர்
மறந்துட்டாரோ?
பா.ம.க., தலைவர் அன்புமணி பேட்டி: மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் தான், தமிழகத்திற்கு நிறைய வளர்ச்சி திட்டங்கள் வரும். மத்திய அரசுடன் எதிர்ப்பு போக்கு இருந்தால், தமிழகத்திற்கு பிரச்னைகள் தான் அதிகம் ஏற்படும். மத்திய பா.ஜ., அரசை எதிரியாக நினைத்து, தி.மு.க.,வினர் அரசியல் செய்து வருகின்றனர். அடிப்படை கட்டமைப்புகள் வேண்டும் என்றால், மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்.
தி.மு.க.,வினருக்கு தனிப்பட்ட முறையில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ.,யால் ஆபத்து வந்தால் மட்டுமே, மத்திய அரசுடன் இணக்கமா போவாங்க!
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: விமான பணிப்பெண்ணிடம், தி.மு.க., கவுன்சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது, கேவலத்தின் உச்சம். இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த தி.மு.க., நிர்வாகி என, நிறைய சம்பவங்களை அடுக்கி கொண்டே செல்லலாம். பெண்கள் நடமாடவே பயப்படக்கூடிய ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டியது, தமிழக பெண்களின் கடமை.
'வேலியே பயிரை மேயுது' என்ற பழமொழிக்கு உதாரணம், இதுபோன்ற ஆளுங்கட்சியினர் தான்!
தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை: சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு, இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ளது. ஆட்சி கையில் இருக்கும் போது வாக்குறுதியாக கொடுத்த ஒன்றை, முதல்வர் ஸ்டாலின் செய்து காட்டி இருக்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்கள், 12,000 பேரை காலமுறை சம்பளத்தில் பணி நிரந்தரம் செய்ய, போதுமான நிதியை முதல்வர் ஒதுக்க வேண்டும்.
இவரது கோரிக்கை, இந்த முறை தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கண்டிப்பா இடம்பெறும்!

