PUBLISHED ON : மார் 11, 2026 01:44 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: 'வரும் தேர்தலில் ஜெயகுமாருக்கு, 'சீட்' கிடையாது; அவர் மகனுக்கு தான் தேர்தலில் இடம்' என, செங்கோட்டையன் கூறியுள்ளார். செங்கோட்டையன் என்னை மதிக்கக்கூடியவர். அவர் எப்போது ஜோதிடர் ஆனார் என்பது எனக்கு தெரியவில்லை. நிச்சயமாக சொல்கிறேன்... நான் எம்.எல்.ஏ., தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று பதவி ஏற்பதை பார்த்து, செங்கோட்டையன் ஆனந்த கண்ணீர் வடிப்பார்; அது நடக்கும். 'பதவியேற்பு'ன்னு மொட்டையா சொல்றாரே... எம்.எல்.ஏ., பதவியா, அமைச்சர் பதவியான்னு தெளிவா சொல்ல மாட்டேங்கிறாரே!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி: மகளிருக்கான த.வெ.க.,வின் திட்டங்கள், புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதை. தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க., அரசு பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது; மகளிர் நலனை கருத்தில் கொண்டு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. இதை எதிர்கொள்ள, இலவச வாக்குறுதிகளை அளிக்க வேண்டிய கட்டாயம் விஜய்க்கு ஏற்பட்டிருக்கிறது.
இலவசங்கள் இல்லாம தேர்தலில் ஜெயிக்க முடியாது என்ற கட்டாயத்துக்கு விஜயையும் தள்ளிட்டாங்களே! தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'ஐந்து ஆண்டுகளில் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்திருக்கிறோம். அதனால், எங்கள் வெற்றி எளிதாகி விட்டது. பிரசாரத்திற்கு போக வேண்டுமா என யோசித்து வருகிறோம்' என்று, துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார். ஆமாம்... சட்டம் - ஒழுங்கை சீர்குலைப்போம் என்றும், பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க தவறுவோம் என்றும் சொல்லவில்லை; ஆனால், அனைத்தையும் செய்தீர்கள். இப்படி சொல்லாத விஷயங்களை செய்ததால், மக்கள் கோபப்படுவர் என்ற பயத்தில், பிரசாரத்திற்கு போக வேண்டுமா என, யோசிக்கிறீர்களோ?
உதயநிதி சொன்ன அர்த்தத்தை, 'உல்டா' பண்ணி, பந்தை அவர் பக்கமே திருப்பிட்டாரே!
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: போலீசாரால் பெண்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள், தி.மு.க., ஆட்சியில் ஏராளமாக நடக்கின்றன. இதற்கு காரணம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை, தி.மு.க., சாதாரணமாக கடந்து செல்லும் என்ற மனநிலையை, குற்றவாளிகளுக்கு ஏற்படுத்தியதே. 'அப்பா' என தன்னை அழைக்கச் சொல்லி விளம்பரம் தேடும் முதல்வர், பாதிக்கப்பட்டோருக்கு அப்பாவாக இல்லாமல், குற்றவாளிகளுக்கு அப்பாவாக இருப்பது, மன வேதனையை அளிக்கிறது.
'அப்பா என அழைத்தவர்கள், அப்பப்பா என அழைக்கும் நிலைக்கு ஆளாகிட்டாங்க'ன்னு சொல்றாங்களோ?

