PUBLISHED ON : மார் 15, 2026 02:15 AM

தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: வரும்
சட்டசபை தேர்தல், சரித்திரம் காணா விசித்திரமாக இருக்கப்போகிறது.
முதலிடத்தையும், முதல்வர் இருக்கையையும் ஸ்டாலினுக்கு ஒதுக்கி
வைத்துவிட்டு, இரண்டு மற்றும் மூன்றாம் இடங்கள் யாருக்கு என்பதை
தீர்மானிக்கும் திருவிழாவாக இருக்கப் போகிறது. தி.மு.க, - அ.தி.மு.க., என்ற
அரை நுாற்றாண்டு கால தேர்தல் வரலாற்றை, தி.மு.க., - தே.ஜ., கூட்டணி என
திருத்தி எழுத பார்க்கிறது, பா.ஜ., எனும் காவி கம்பெனி. தே.ஜ., கூட்டணியில்
தான், அ.தி.மு.க., இருக்கு என்பதையும், தமிழகத்தில் அந்த கூட்டணிக்கு,
அ.தி.மு.க., தான் தலைமை வகிக்கிறது என்பதையும் இவர் மறந்துட்டாரோ?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு: 'தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., தலைமையை, பா.ஜ., மாற்றிவிடும்' என்ற அவதுாறு பிரசாரத்தை முதல்வர் ஸ்டாலின் பரப்புகிறார். இதே பா.ஜ.,வுடன் மத்திய அமைச்சரவையில், தி.மு.க., இடம்பிடித்த போது, தி.மு.க., தலைமையை பா.ஜ., மாற்றியதா? 'தமிழகத்தில், அ.தி.மு.க., தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்' என, பா.ஜ., தலைவர்களே கூறிவிட்டனர். அது பற்றிய கவலை ஸ்டாலினுக்கு வேண்டாம்.
அப்ப, தி.மு.க., - எம்.பி.,க்கள் தயவில் மத்திய பா.ஜ., ஆட்சி நடந்துச்சு... அதனால, அந்த யோசனை அவங்களுக்கு வந்திருக்காது... ஆனா, இப்ப நிலைமை அப்படியில்லையே!
தமிழக காங்., பொறுப்பாளர் நிவேதிக் ஆல்வா பேட்டி: தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு, 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் என்பதில், எங்கள் கூட்டணிக்குள் எவ்வித முரண்பாடுகளும் எழவில்லை; விரைவில் அது முடிவுக்கு வரும். இதன்பின் தமிழக தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல், பிரியங்கா, கார்கே வரவுள்ளனர்.
இப்ப, உங்க கட்சி எம்.எல்.ஏ.,க்கள், அவங்க தொகுதி களில் நிறைய அதிருப்தியை சம்பாதிச்சு வச்சிருக்கிறதால, மீண்டும் அந்த தொகுதிகள் உங்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்!
தமிழக துணை முதல்வர் உதயநிதி பேச்சு: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளாக, 1.31 கோடி மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, இத்திட்டத்தை நிறுத்த ஒரு கூட்டம் நீதிமன்றம் வரை சென்றது. இதை முன்கூட்டியே தெரிந்த முதல்வர் ஸ்டாலின், மூன்று மாத தொகை, கோடைக்கால சிறப்பு நிதி என ஒரே தவணையாக, 5,000 ரூபாயை குடும்ப தலைவியரின் வங்கி கணக்குகளில் வரவு வைத்தார்.
அடுத்த வருஷமும் கோடைக் காலம் வருமே... இவங்க ஆட்சி நீடித்தால், அப்பவும் சிறப்பு நிதி தருவாங்களா?

