PUBLISHED ON : மார் 20, 2026 03:36 AM

தி.மு.க., - காங்., கூட்டணிக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து
வரும், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி பேட்டி:
தி.மு.க.,வில் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம் பெரும் அதிருப்தி
உள்ளது. இதை, தி.மு.க., தலைமை புரிந்து கொள்ளா விட்டால், மூன்று
மாதங்களுக்கு பின், ஆறுதல் கூறக் கூட யாரும் இருக்க மாட்டார்கள். அமைச்சர்
நேரு மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியும்
இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. இதற்கு காரணம், தி.மு.க.,வும்-,
பா.ஜ.,வும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். 'பா.ஜ.,வுடன் நேரடியாக
கூட்டணி வைத்தால், சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காதுன்னு, தி.மு.க.,
ரகசிய கூட்டணி வச்சிருக்கு'ன்னு சொல்ல வர்றாரோ?
அன்புமணி அணியின் பா.ம.க., பொருளாளர் திலகபாமா பேட்டி: பா.ம.க.,வில் எந்த தொய்வும் இல்லை. அனைத்து நிர்வாகிகளும் அன்புமணி தலைமையில் களப்பணியாற்றி வருகின்றனர். தே.ஜ., கூட்டணியில், பா.ம.க., வேட்பாளர்கள் களமிறங்கும் தொகுதிகளில், போட்டி வேட்பாளர்களை ராமதாஸ் நிறுத்துவார் என நினைக்க வேண்டியதில்லை. அங்கிருப்பவர்கள் அவர் மீதான பாசத்தில் விட்டுக்கொடுக்க முடியாமல் நிற்கின்றனரே தவிர, பா.ம.க., தலைவர் அன்புமணியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை.
அப்படி என்றால், அன்புமணியுடன் இருப்பவர்களுக்கு ராமதாஸ் மீது பாசமில்லைன்னு சொல்ல வர்றாங்களோ?
அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை பேச்சு: அமைச்சர் பதவிக்கு நிகரானது தான், துணை முதல்வர் பதவி. ஆனால், பிரதமருக்கு தருவது போல், துணை முதல்வர் உதயநிதிக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கின்றனர். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் உதயநிதி. அவர்கள் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, மக்கள் முடிவு செய்து விட்டனர். முதல்வர் ஸ்டாலின் என்ன கூறினாலும், உதயநிதி எத்தனை ஊர் சுற்றினாலும், மக்கள் மனதில் இருப்பது அ.தி.மு.க., தான்.
தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மத்தியில், விஜய் கட்சின்னு ஒண்ணு இருப்பதையே இவர் மறந்துட்டாரே!
தமிழக துணை முதல்வர் உதயநிதி பேச்சு: தமிழகம் முழுதும், 4 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்படுகின்றன. இவர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில், 1.41 லட்சம் கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் குழுக்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி அவர்கள், தங்கள் தயாரிப்புகளை, 25 கிலோ வரை, 100 கி.மீ., வரை அரசு பஸ்களில் கட்டணமின்றி எடுத்துச் சென்று விற்பனை செய்யலாம்.
மகளிருக்கே எல்லா திட்டங்களையும் அறிவிக் கிறீங்களே... ஆண்கள் கோபம் எல்லாம், உங்களுக்கு எதிரா திரும்பிட்டா என்னாகும்?

