PUBLISHED ON : மார் 23, 2026 12:23 AM

அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலாளர் டாக்டர் சரவணன் அறிக்கை:
கடந்த 2021 முதல் 2025 வரை நாடு முழுதும் 5,28,431 ' போக்சோ ' வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் மட்டும் 39,999 வழக்குகள் பதிவாகி உள்ளன. போக்சோ வழக்குகளில், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. பள்ளி மாணவியர், பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்படும் மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. காவல் துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் நிர்வாக சீர்கேட்டு ஆட்சிக்கு இதுவே சாட்சி.
தமிழகத்தில் பதிவான 39,999 போக்சோ வழக்குகளிலும் எத்தனை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி குடுத்தாங்க என்பது தெரியலையே!
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி:
தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில், 8,900 கொலைகள் நடந்துள்ளன. இதில், 1977 கொலைகள் பெண்களுக்கு எதிரானவை. அதிலும், 389 கொலைகள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்.
இதுபோன்ற கொடூர செயல்களுக்கு காரணம், கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்கள் தான். ஆனால், முதல்வர் ஸ்டாலின் அனைத்தையும் மறுக்கிறார். அவரது கண்காணிப்பில் காவல் துறை இல்லை. ஆட்சி மாற்றம் தான் இதற்கு முடிவாக இருக்கும்.
மகளிர் உரிமைத்தொகை, 1,000 ரூபாய் வாங்கும் பெண்கள், இதை எல்லாம் யோசித்து பார்த்து ஓட்டு போடுவாங்களா என்ன?
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பிரசார மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா பேட்டி:
எங்களுக்கு எதிராக அவதுாறு கருத்துக்களை தெரிவிக்கும் தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும், தி.மு.க., ஆதரவாளர்களுக்கும், நபிகள் நாயகத்தின் வழிப்படி, எங்கள் அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன். இதுதான் அவர்களுக்கு பதில்; இதற்கு மேல் அவர்களுக்கு பதில் கொடுக்க எங்களுக்கு நேரமில்லை.
ரஜினி பற்றி ஏடாகூடமா கருத்து சொல்லி, விஜயிடம், குட்டு வாங்கியதால, எதிர்க்கட்சிகள் விஷயத்தில் இப்படி அடக்கி வாசிக்கிறாரோ?
தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ் பேட்டி:
தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் முடிவாக வில்லை. தொகுதி பங்கீடு முடிந்த பின்னர், தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., தலைமை ஆலோசித்து எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். நாங்கள் கூட்டணிக்கு சென்றதால், தி.மு.க., 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெறும்.
'எங்களால தான் தி.மு.க., கூட்டணியே ஜெயிக்க போகுது... அதனால, கணிசமான இடங்களை ஒதுக்கணும்'னு சொல்லாம சொல்றாரோ?

