PUBLISHED ON : மார் 25, 2026 03:08 AM

தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி பேச்சு: யார் யாரோ கோவையை தங்கள்
கோட்டை என்கின்றனர். மேற்கு மண்டலம் எப்போதும் தி.மு.க.,வின் கோட்டை என
நிரூபிக்க, நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இளைஞர் அணியினர் வீடு வீடாகச்
சென்று பிரசாரம் செய்ய வேண்டும். தேர்தல் எனும் ஜனநாயகப் போருக்கு அனைவரும்
தயாராக வேண்டும். கடைசி நேரத்தில் கூடுதல் முயற்சிகளை எடுக்க வேண்டும்.
தேர்தல் வெற்றிக்குப் பின், மகளிர் உரிமைத்தொகை 2,000 ரூபாயாக
உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இச்சாதனைகளை மக்களிடம் கொண்டு
சேர்த்து, நம் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். கூடுதல் முயற்சின்னு
சொல்லிட்டு, 2,000 ரூபாய்னு வேற சுட்டிக்காட்டுறாரே... 'ஓட்டுக்கு,
2,000த்தை வெட்டுங்க'ன்னு நாசுக்கா சொல்றாரோ?
தமிழர் மீனவர் கூட்டமைப்பு நிறுவனர் ரஜினிமகி பேட்டி: சட்டசபை தேர்தலுக்கு பின், நடிகர் விஜய் அரசியல் களத்தில் இருக்க மாட்டார். மீனவர் சமுதாய மக்கள் அவருக்கு ஆதரவு தருவது போல வரும் கருத்து கணிப்புகள் எல்லாம் பொய்யானவை. மீனவர்கள் பிரச்னைக்கு முதலில் அறிக்கை விடுபவர், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தான். இதனால், கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள், ராமதாஸ் - சசிகலா கூட்டணிக்கே ஆதரவு அளிப்பர்.
இந்த ஆதரவு மூலம், தமிழகத்தில் இருக்கும் 14 கடலோர மாவட்டங்களிலும், ராமதாஸ் - சசிகலா கூட்டணி வெற்றிக்கனியை பறிச்சிடுமா?
அ.தி.மு.க., ஆட்சியில் தமிழக முதல்வராக இருந்தவரும், தற்போது தி.மு.க., உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் பேச்சு: நல்லாட்சி தந்த, அனைத்து துறைகளையும் முதல் இடத்திற்கு கொண்டு வந்த முதல்வராக ஸ்டாலின் உள்ளார்; ஐந்தாண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்துள்ளார். மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சி, 8 சதவீதத்திற்கும் கீழாக உள்ளது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் 11.08 சதவீதம் வளர்ச்சி அடைந்து, முதன்மை மாநிலமாக உள்ளது.
'டாஸ்மாக்' மதுபான விற்பனையிலும் தமிழகம் முதன்மை மாநிலமா தான் இருக்குது... அதுவும், முதல்வரின் சாதனை பட்டியலில் சேருமா?
திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா பேட்டி: தமிழக தேர்தலில் நான்கு முனை போட்டி என்கின்றனர்; ஆனால், அ.தி.மு.க., - தி.மு.க., என, இரு முனை போட்டி தான் நிலவுகிறது. அ.தி.மு.க., யாருக்கும் அடிமை கிடையாது. ஆனால், 28 தொகுதிகளை கொடுத்து, காங்கிரசுக்கு தி.மு.க., தான் அடிமையாகி விட்டது.
இப்ப 18 எம்.எல்.ஏ.,க்கள் இருக்கும் காங்கிரசுக்கு, தி.மு.க., கூட்டணியில் 28 'சீட்'கள் தந்திருக்காங்க... ஆனா, நாலே நாலு எம்.எல்.ஏ.,க்கள் இருக்கும், பா.ஜ.,வுக்கு, நீங்க 27 தொகுதிகளை ஒதுக்கியிருக்கீங்களே!

