PUBLISHED ON : மார் 30, 2026 03:19 AM

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு:
அரசு ஊழியர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம், துாய்மை பணியாளர்கள் போராட்டம் என, ஓட்டு போட்ட மக்கள், போராடி, போராடி தான் எதையும் பெற வேண்டுமா... பிள்ளையின் பசி அறிந்து பால் கொடுக்கும் ஒரு தாயை போல, அரசு அதிகாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் தேவையை அறிந்து, அதை நிறைவேற்றுபவன் தான் உண்மையான தலைவன்.
இவர் சொல்ற மாதிரியான ஒரு தலைவரை, இந்த ஜென்மத்துல எந்த கட்சியிலும் பார்க்க முடியாது!
தமிழக, பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சமூக நீதிக் கல்லுாரி மாணவியர் விடுதியில் தரமற்ற, புழுக்கள் நிறைந்த உணவு வழங்கப்பட்டதாக, அவ்விடுதி மாணவியர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது, பெண்கள் மற்றும் மாணவியரின் நலனை, தி.மு.க., அரசு புறக்கணித்து வருவதை உணர்த்துகிறது.
பெண்களுக்கு, 1,000 ரூபாய் கொடுத்து விட்டதாக மார் தட்டிக் கொள்ளும், தி.மு.க., அரசு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவில்லை. இது தான், திராவிட மாடல் அரசு.
ஓட்டு போடும் பெண்கள், இதை எல்லாம் சிந்தித்து பார்த்து ஓட்டளித்தால், திராவிட மாடல் அரசின் சாயம் வெளுத்துடும்!
தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணைத் தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை:
'எல்லைக்கே வந்து சேர மாட்டோம் என்ற தோல்வி பயம் கொண்ட ஒருவனே முந்திக் கொண்டு ஓடுவான்' என்பது போல், 'பருப்பு, எண்ணெய் இலவசம், பிரிஜ் இலவசம்' என, மக்களை இழிவாக எண்ணும் பழனிசாமியின் மளிகை கடை அறிவிப்புகள், அவரது பதற்றத்தையும், படுதோல்விக்கு காத்திருக்கும், அ.தி.மு.க.,வின் பரிதாப நிலையையும் காட்டுகின்றன.
இவரது, தி.மு.க., அறிவித்த இலவசங்கள் எல்லாம் மக்களை இழிவாக எண்ணலையா?

