PUBLISHED ON : ஏப் 15, 2026 01:49 AM

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேச்சு: முதல்வர்
ஸ்டாலின், 'ஒரு, 'சீட்' கொடுக்கிறேன்; தேர்தல் செலவுக்கு பல கோடி ரூபாய்
தருகிறேன்' என்றார். 'எதுவும் வேண்டாம், நான் என் மக்களை பார்க்க போகிறேன்'
என்று கூறிவிட்டு வந்து விட்டேன். எங்கள் கட்சியில் ஜாதி கிடையாது.
முஸ்லிம்கள், ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்ற
கொள்கை கொண்டது எங்கள் கட்சி. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,
கூட்டணியில் ஒரு சீட் வாங்கி ஜெயித்தாரே...
அப்ப, எத்தனை கோடி ரூபாய் வாங்கினேன்னு சொல்ல மாட்டேங்கிறாரே!
பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின் பேச்சு: 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையிலும், தமிழ் பண்பாடு, கலாசாரத்தை போற்றும் வகையிலும், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை, பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறார். தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், ஏழைகளின் வாழ்வில் வளர்ச்சி, மறுமலர்ச்சி, பெண்களுக்கு உயர்ந்த பாதுகாப்பு வழங்கக்கூடிய ஆட்சியாக இருக்கும்.
தே.ஜ., கூட்டணி ஆட்சி'ன்னு சொல்லி, 'ஆட்சியில் பா.ஜ.,வும் பங்கு பெறும்'னு அ.தி.மு.க.,வுக்கு சொல்லாம சொல்றாரோ?
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டி: நம் நாட்டில், 10 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள, 40 நகரங்களில், சுத்தம், சுகாதாரத்தில் கடைசி இடத்தில் இருப்பது மதுரை. இது, ஆட்சியாளர்களின் தவறு. மதுரை மாநகராட்சி மேயராக இருந்த தி.மு.க.,வைச் சேர்ந்த இந்திராணியின் கணவர் பொன் வசந்த், 200 கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளார். இதனால், 2025 அக்டோபரில் மேயர் இந்திராணி பதவி விலகினார். இன்னும் புதிய மேயரை நியமிக்கவில்லை. இதை எல்லாம், வரும் சட்டசபை தேர்தலில் சரிசெய்ய வேண்டும்.
'மதுரை மாநகர மக்கள் இதை எல்லாம் சிந்தித்து பார்த்து ஓட்டு போடணும்'னு சொல்றாரோ?
தமிழக துணை முதல்வர் உதயநிதி பேச்சு: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை பொறுத்தவரை, முதலில் ஜெயலலிதா காலை பிடித்தார்; பின், சசிகலா, தினகரன் காலை பிடித்தார்; தற்போது, மோடியின் காலை பிடித்துக் கொண்டிருக்கிறார். இதை தான், நான் முரட்டு அடிமை என, கூறுகிறேன். இவ்வாறு கூறுவதற்கு எனக்கு அனுபவம் இல்லை என, பழனிசாமி கூறுகிறார். உண்மையில் எனக்கு இது போன்ற அடிமையாக இருந்த அனுபவம் இல்லை என்பதை ஒப்புக் கொள் கிறேன்.
ராஜா வீட்டு கன்றுக்குட்டியான இவர், யாருக்கு அடிமையாக இருக்கணும்... இவருக்கு தான், இவரது கட்சியினர் அடிமையா இருக்காங்க!

