PUBLISHED ON : ஏப் 24, 2026 01:02 AM

தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: போயஸ்
தோட்டத்தில் ஜெயலலிதா வீட்டு வாசலில், ஜஸ்வந்த் சிங்கும், யஷ்வந்த்
சின்ஹாவும், அத்வானியும் காத்து கிடந்தும், 1998ம் ஆண்டு, 13 மாதங்களிலேயே
கருக்கலைப்பு செய்யப்பட்டது, மத்திய பா.ஜ., ஆட்சி. ஆனால், வாஜ்பாயிடம்,
'அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மாட்டோம்; காஷ்மீரின் சிறப்பு சலுகைகளை
பறிக்க மாட்டோம்' என எழுதி வாங்கிக் கொண்டு, ஐந்தாண்டு காலம் அமைதியாக
பா.ஜ.,வை ஆட்சி நடத்த விட்டது தி.மு.க., மட்டுமே. அதற்கு பிரதிபலனாக, வளமான
துறைகளின் மத்திய அமைச்சர் பதவிகளை தி.மு.க., வாங்கியதை சொல்ல
மாட்டேங்கிறாரே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: 'தொகுதிகள் மறுவரையறை செய்ய அமைக்கப்படும் கமிஷன், அரசின் கைப்பாவையாக செயல்படும்' என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி முதலில் சொன்னார். பின், 'அதே கமிஷன், அரசின் பரிந்துரையை ஏற்காவிட்டால் என்ன செய்வீர்கள்' என்றும் வினவுகிறார். கமிஷன் அமைக்கும் முன்பே, அதன் பரிந்துரைகள் என்னவாக இருக்கும் என தெரியாத நிலையில், தமிழகத்தில் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்ற முடிவுக்கு, தி.மு.க.,வும், காங்கிரசும் எப்படி வந்தன?
பெண்ணுரிமை பேசும் கனிமொழி, கண்டிப்பா இந்த சட்டத்தை மனதளவில் ஆதரிக்கவே செய்வாங்க... கட்சிக்கு கட்டுப்பட்டு வெளியில இப்படி பேசியிருப்பாங்க!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு: நடிகர் விஜய்க்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் கிடையாது. அவருக்கு பா.ஜ., போட்டுக் கொடுத்த செயல் திட்டம் மட்டும் தான் தெரியும். அதாவது, 'எங்களுக்கு முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் ஓட்டு போட மாட்டார்கள். அது தி.மு.க.,வுக்கு தான் போகும். அங்கு போகாமல், அதை நீ வாங்கிக் கொள். உன் பெயரை ஜோசப் விஜய் என உச்சரி; அப்போது தான், ஒவ்வொரு தொகுதியிலும் கிறிஸ்துவர்களின் 1,000 ஓட்டுகளை வாங்கலாம். இதனால், தி.மு.க., வேட்பாளர்கள் தோற்பர்' என்பது தான் பா.ஜ.,வின் திட்டம்.
விஜய் படங்களின் கதை கூட இவ்வளவு சூப்பரா இருக்காதே... திருமாவளவன் பேசாம திரைக்கதை, வசனம் எழுத போயிடலாம்!
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு: தி.மு.க., ஆட்சி நிலைக்கக்கூடாது என ஒரு கூட்டம் நினைக்கிறது. என்ன குற்றம் செய்துள்ளது இந்த ஆட்சி. மகளிருக்காக எத்தனையோ திட்டங்களை வகுத்தது இந்த ஆட்சி. கல்லுாரி மாணவியருக்கு உதவித்தொகை, மகளிர் முன்னேற்ற திட்டங்கள் என அனைத்து தரப்புக்கும் தேவையான திட்டங்களை கொடுத்துள்ளோம். இதற்காக எங்களை வெளியேற்ற வேண்டுமா?
அண்ணா பல்கலை வளாகம், கோவை விமான நிலையம் அருகில் நடந்த கல்லுாரி மாணவியர் பலாத்கார சம்பவங்கள் எல்லாம், உங்க ஆட்சிக்கு கரும்புள்ளி கள் இல்லையா?

