PUBLISHED ON : ஏப் 28, 2026 12:00 AM

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேட்டி:
தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என தெரியவில்லை. தேர்தல் களம் மிகவும் சூடாக இருந்தது; வெயிலும் அதிகமாக இருந்தது. ஏற்கனவே, நான் சொல்லியிருக்கிறேன்... யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்.
'தி.மு.க., 200 இடங்களை தாண்டி வெற்றி பெற்று, என் தம்பி ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார்'னு அடிச்சு சொல்லாம நழுவுறாரே... தன்னை மீண்டும் கட்சியில் சேர்க்காத விரக்தியில் இருக்கிறாரோ?
நடிகர் சிவகுமார் பேட்டி:
குடிமக்களை, குடிகார மக்களாக்கியது போதும்; யார் ஆட்சிக்கு வந்தாலும், தன் குடும்பத்தினருக்கு கோடி கோடியாக சொத்துக்களை குவிக்காமல், கடைக்கோடி மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்; அதே சமயம், இலவச திட்டங்களும் வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும், 'டாஸ்மாக்' கடைகளை உடனே மூட வேண்டும்.
இவரது இரண்டு மகன்களான சூர்யாவும், கார்த்தியும் சினிமாவில் நடிக்கிறாங்களே... அவங்களிடம், 'சினிமாவில் புகை பிடிக்கும், மது அருந்தும் காட்சிகள்ல நடிக்காதீங்க'ன்னு அறிவுரை சொல்லிட்டு, அப்புறமா ஆட்சியாளர்கள் பக்கம் வரலாமே!
திராவிட வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் மல்லை சத்யா அறிக்கை: தேர்தல் திருவிழா முடிந்து விட்டது. ஓட்டு இயந்திரங்கள் மூடி 'சீல்' வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. இனி தான், தேர்தல் ஆணையம் மிகுந்த விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். தி.மு.க., தலைமையிலான கூட்டணி கட்சியினரும், கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். 'ஓட்டு போட்டு விட்டோம்; இயந்திரங்கள் மூடி முத்திரையிடப்பட்டு விட்டன' என்று அலட்சியமாக இருக்காமல், ஓட்டு இயந்திரங்களை கண் கொத்தி பாம்பாக கண் காணிக்க வேண்டும்.
இவர் பேச்சு, இப்பவெல்லாம், 'காமெடி பீஸ்' ஆகிட்டதால, இவரை யாரும் சீந்துறதே இல்லையே... யார் கேக்கப் போறாங்கன்னு இவர் இதையெல்லாம் சொல்றாரு?
தர்மபுரி பா.ம.க., வேட்பாளர் சவுமியா அன்புமணி பேட்டி: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, நல்லாட்சி மலர, மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். தர்மபுரி சட்டசபை தொகுதி தேர்தல் பணிகளில் அதிகளவில் பெண் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலரும் பெண் அதிகாரியாகவே இருந்தார். தர்மபுரி தொகுதி மக்கள் எனக்கு, 100 சதவீதம் வெற்றி வாய்ப்பை தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.
சவுமியாவுக்கு யாரும் ஓட்டு போடக்கூடாதுன்னு, இவங்க மாமனார் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்ததை எல்லாம் வாக்காளர்கள் பொருட்படுத்தலைன்னு சொல் றாங்களோ?
