PUBLISHED ON : ஏப் 29, 2026 12:00 AM

அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: உலக
பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில், மே 1ல் வைகை ஆற்றில்
கள்ளழகர் இறங்குகிறார். இதை காண, தமிழகம் முழுதும் இருந்து பக்தர்கள்
வருவர். 2022 முதல் 2025 வரை நடந்த விழாக்களில், மக்கள் மூச்சுத்திணறி
பலியான சம்பவங்கள் நடந்தன. அதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில்
போலீசார், தீயணைப்பு துறையினர், மருத்துவ குழுக்களை அமைக்க, மாவட்ட
நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் . வழக்கமா, தி.மு.க.,
அரசுக்கு கோரிக்கை வைப்பவர், இப்ப அவங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை
என்பதால், புத்தி சாலித்தனமா மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கிறாரோ?
*************
அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை பேட்டி: கடந்த 1998 ஜூலை 14ல், மத்திய பா.ஜ., அரசு கூட்டணியில் அ.தி.மு.க., சார்பில் நான் சட்ட அமைச்சராக இருந்தபோது தான், மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தல்படி, அதை முன்மொழிந்தவன் நான்தான் என்பதில் பெருமை கொள்கிறேன். அது பரிசீலனையில் இருந்து, ஓட்டெடுப்பில் தற்போது தோல்வி அடைந்துள்ளது.
இன்னும், 25 வருஷங்கள் ஆனாலும், இந்த மசோதாவை தி.மு.க., - காங்., கட்சிகள் நிறைவேற்றி விடுமா என்பது சந்தேகம்தான்!
*************
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி பேட்டி: இந்த தேர்தலில் தி.மு.க.,வை எதிர்ப்பதில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வேகம் காட்டவில்லை. கட்சி ஒன்றுபட வேண்டும் என்று பேசிய என்னை போன்றவர்களை, 'ரோட்டில் போகிறவர்கள் சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை' என, ஆணவத்தோடு பேசினார். ஒருவேளை, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து விட்டால், பழனிசாமி நிகரற்ற தலை வராகலாம்.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்துட்டா, 'பழனிசாமி நிகரற்ற தலைவர்னு அன்னைக்கே நான் சொன்னேன்'னு பிளேட்டை திருப்பி போடுவாரோ?
*************
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி: பொது வாழ்க்கைக்கு முழு நேரமும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களையே மக்கள் ஏற்றுக் கொள்வர். மே 4ல் நடக்கும் ஓட்டு எண்ணிக்கையில், அ.தி.மு.க.,வுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்கள் கூட்டணி, 210 தொகுதிகளில் வெற்றி பெற்று பழனிசாமி முதல்வராவார்.
முதல்வர் ஸ்டாலினே, 200 தொகுதிகளுக்கு தான் இலக்கு நிர்ணயம் பண்ணியிருக்காரு... இவர், 10ஐ கூடுதலா சொல்றாரே... இவரது தன்னம்பிக்கையை பாராட்டியே ஆகணும்!

