PUBLISHED ON : மே 02, 2026 02:12 AM

தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: தமிழக மின்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, மின்மாற்றிகள் எனும், 'டிரான்ஸ்பார்மர்'கள் கொள்முதலில், அரசுக்கு 375 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இம்மாபெரும் ஊழலில் தொடர்புடைய அனைவரும் விரைவில் தண்டிக்கப்பட்டு, சிறை செல்வது உறுதி.
'சி.பி.ஐ., மத்திய பா.ஜ., அரசு வசம் இருப்பதால், யாரும் தப்ப முடியாது'ன்னு சொல்லாம சொல்றாரோ?
அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், '130 இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க., ஆட்சி அமைக்கும்' என, கருத்து கணிப்புகள் வெளியாகின. ஆனால், தி.மு.க.,வால் எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை. 2016 தேர்தலிலும், 'தி.மு.க., ஆட்சிக்கு வரும்' என, கணிப்பு வெளியிட்டனர். ஆனால், அ.தி.மு.க.,வே மீண்டும் ஆட்சி அமைத்தது. அதிக ஓட்டுகள் பதிவானால், ஆளுங்கட்சிக்கு எதிராகவே இருக்கும் என்பது, கடந்தகால வரலாறு. கருத்து கணிப்புகளை பொய்யாக்கும் வகையில், அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று, பழனிசாமி முதல்வராவார்.
யாருக்கு ஓட்டு போட்டோம்கிறதை வாக்காளர்கள் தப்பு தப்பா சொல்லி, கருத்து கணிப்பு நிறுவனங்களை நல்லாவே குழப்பிடுறதால, இவர் சொல்றது நடக்க அதிக வாய்ப்பிருக்கு!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை: உழைப்பு என்பது, மனித இனத்தின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, சமூக முன்னேற்றத்துக்கும் அடிப்படை காரணியாக இருக்கும் உந்து சக்தி. தங்கள் வியர்வையால் உலகை உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு என் உழைப்பாளர் தின வாழ்த்துகள். தி.மு.க., ஆட்சியில் தொழிலாளர் நலம் காக்க, எண்ணற்ற திட்டங்களை தீட்டி நிறைவேற்றியது, வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துக்களாக மின்னிக் கொண்டிருக்கின்றன.
தேர்தலில், வீடு வீடாக பண பட்டுவாடாவை கச்சிதமாக செய்த தி.மு.க.,வினரின் உழைப்புக்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது!
தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன் பேச்சு: வெளிநாட்டு நிதியுதவி சட்ட திருத்த மசோதா, ஜனநாயகத்தின் அடித்தளத்தையே பாதிக்கும் அபாயம் கொண்டது. மேலும், இது தன்னார்வ அமைப்புகளின் சுயாட்சி மற்றும் செயல்பாட்டை கடுமையாக பாதிக்கும். குறிப்பாக, ஏழை, தலித் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கான கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகள் குறையக் கூடும்.
வெளிநாட்டு நிதி வசூலில் நிறைய முறைகேடுகள், மதமாற்ற முயற்சிகள் நடப்பது எல்லாம் இவருக்கு தெரியாதா?

