PUBLISHED ON : மே 04, 2026 01:27 AM

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர், டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை:
கடந்த, ஐந்து ஆண்டுகளும், அரசு டாக்டர்களுக்கு, கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி, நம்பிக்கை துரோகம் செய்ததை மறக்கவும் முடியாது; மன்னிக்கவும் முடியாது. இந்த சட்டசபை தேர்தல் முடிவுகள், அரசு டாக்டர்களுக்கு மட்டுமன்றி, சுகாதார துறைக்கே மிகப்பெரிய திருப்பு முனையாக நிச்சயம் அமையும் என நம்புகிறோம்.
ஓட்டுப்பதிவில் ஆளுங்கட்சிக்கு எதிராக அரசு டாக்டர்கள், 'வேலை'யை காட்டிட்டாங்க என்பது நல்லாவே தெரியுது!
துாத்துக்குடி வடக்கு மாவட்ட, காங்., தலைவர் பெருமாள்சாமியின் சமூக வலைதள பதிவு:
இந்த தேர்தலில், விஜயின், தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தால், காங்., நிச்சயம் புத்துயிர் பெற்றிருக்கும். 'இந்த தேர்தலில், விஜய் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்' என, வைகோ உட்பட அரசியல் கட்சியினர் பலர் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
மீண்டும் மீண்டும், தி.மு.க., கூட்டணியில் இருப்பதால் தேய்ந்து தான் போவோம். காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்ட, 28 தொகுதிகளில் எத்தனை இடங்களில் வெற்றி பெறப் போகிறோம் என்பது இன்று நடக்கும் ஓட்டு எண்ணிக்கையில் தெரிந்து விடும். விஜய் கட்சியுடன் இருந்திருந்தால், நிச்சயம் அதிக தொகுதிகள் கிடைத்திருக்கும்.
விஜய் கட்சியுடனான கூட்டணியை தடுத்த, காங்., தலைவர்களுக்கு, 'கல்தா' காத்திருக்குது!
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் தீர்மானம்:
பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு, 2025ல், நிறைவேற்றிய சட்டத்தின் படி, கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில், 125 நாட்களுக்கு வேலை வழங்குவதற்கு போதிய நிதி ஒதுக்கீட்டை வழங்கவில்லை. மாநில அரசுகள், 40 சதவீதம் நிதியை தர வேண்டும் என்று சட்டம் இயற்றி, மாநில அரசுகளை நிதிச்சுமையில் தள்ளியுள்ளது.
இதை கண்டித்து, வரும், 15ம் தேதி தமிழகம் முழுதும் உள்ள அனைத்து ஊராட்சி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவங்க ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய அரசு பணிஞ்சிடும் எப்படி முடியும் என்பது தெரியாதா?
ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டசபை தொகுதி, தி.மு.க., வேட்பாளர், தோப்பு வெங்கடாசலம் பேட்டி: பெருந்துறை தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையத்தில், அசம்பாவிதங்கள் நடக்கும் என, எனக்கு தெரிந்த நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்தன. எனவே, கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்துள்ளேன். பொதுவாக யாரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை... எனக்கு கிடைத்த தகவலின் அடிப் படையில், பாதுகாப்பை பலப்படுத்த கேட்டுள்ளேன்.
'ஆளுங்கட்சியினரால தான் அச்சுறுத்தல்'னு எதிர்கட்சிகள் எல்லாம் புகார் பண்றதால, நம்ம பங்குக்கு, நாமும் புகார் பண்ணி வைப்போம்னு நினைச்சிருப்பாரோ?

