PUBLISHED ON : மே 05, 2026 12:38 AM

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டி: விஜயை குறைவாக மதிப்பிடாதீர்கள் என்று அன்றைக்கே கூறினேன். அதன்படி, கருத்து கணிப்பிலும் விஜய்க்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில், விஜய்க்கு இருக்கும் நல்ல மதிப்பு வேறு எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இல்லை. இந்த நம்பிக்கையை விஜய் எப்போதும் காப்பாற்ற வேண்டும்.
அரசியலுக்கு ஜூனியரான நீங்க கணிச்சதை, பழம் தின்று கொட்டை போட்ட திராவிட இயக்க தலைவர்கள் கணிக்க தவறிட்டாங்களே... நடிகரை பார்க்க கூடும் கூட்டம் எல்லாம் ஓட்டுகளாக மாறாது என்ற இறுமாப்பில் இருந்தவங்களுக்கு, சரியான சவுக்கடி விழுந்திடுச்சு!
நடிகை அம்பிகாவின் சமூக வலைதள பதிவு:
மிஸ்டர் பிரகாஷ்ராஜ்... ஒரு பாடல் போதும், ஏழையாக இருந்து பணக்காரன் ஆவதற்கு; முழு படமும் தேவையில்லை. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி, என்.டி.ராமாராவ், ஏன் துணை முதல்வராக இருந்த உதயநிதி, கமல் எல்லாம் சினிமாக்காரங்க இல்லையா. ஒருவேளை உங்களுக்கு கமல் அல்லது ரஜினி முதல்வராக வந்தால் ஓகேவா. விஜய் முதல்வரானதில் உங்களுக்கு பொறாமையா இல்லை வருத்தமா?
பிரகாஷ் ராஜும், கர்நாடகாவில் தேர்தலில் நின்று தோற்று போனவர் தானே... அந்த விரக்தியில, விஜயை விமர்சனம் பண்ணியிருப்பாரு!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அறிக்கை: தமிழகத்தை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும். உண்மையான ஒரு தமிழன், எப்போதும் மக்களை ஏமாற்ற மாட்டான். தமிழ் மக்களின் நலனுக்காக போராடுவான். இப்போது, தமிழக அரசியல் களத்தில் ஒரு நம்பிக்கை நாயகனாக விஜய் உருவாகி இருக்கிறார். நிச்சயம் அந்த தமிழன் கையால், தமிழக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்கும்.
இதுக்கு முன்னாடி இருந்த ஆட்சியாளர்கள் எல்லாம் மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தியதால், அவங்க எல்லாம் தமிழர்களே இல்லன்னு சொல்றாரோ?
நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் அறிக்கை: இத்தனை வருஷங்களாக ஊழல் பண்ணி, மக்களை குடிகாரன்களாக்கி தமிழகத்தை அழித்தவனிடம் இருந்து காப்பாற்ற புது சக்தி ஒன்று வந்துள்ளது. இந்த முறை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒற்றுமையாக இருந்து ஓட்டளித்துள்ளனர். நிச்சயமாக இந்த ஆட்சி மாற்றம், மக்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும்.
கிட்டத்தட்ட, 59 வருஷங்களாக தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட கட்சியினர், தமிழர்களை சுரண்டி சம்பாதித்த பணத்தில், 5,000 முதல் 10,000 கோடி ரூபாய் வரை இந்த தேர்தலில் வாரியிறைச்சாங்க... ஆனாலும், தமிழக மக்கள் தங்களது தீர்ப்பை தெளிவா எழுதிட்டாங்க!

